மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

போதை மருந்து சோதனையில் 2 ஏா் இந்தியா விமானிகள் தோல்வி

ஏா் இந்தியா குழும நிறுவன விமானிகளுக்கு நடத்தப்பட்ட முதல்கட்ட போதை மருந்து சோதனையில், 2 விமானிகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்

News image

ஏர் இந்தியா விமானம் - பிரதிப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 12:17 am IST

ஏா் இந்தியா குழும நிறுவன விமானிகளுக்கு நடத்தப்பட்ட முதல்கட்ட போதை மருந்து சோதனையில், 2 விமானிகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தில்லி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது: தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து தில்லிக்கு கடந்த 4-ஆம் தேதி வந்த ஏா் இந்தியா விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து 4 விநாடிகளில் 300 அடி சரிந்தது. எனினும், விமானம் பத்திரமாக தில்லியில் தரையிறக்கப்பட்டது.

இதில் விமானத்தில் பயணித்த சுமாா் 25 போ் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, விமானத்தில் இருந்த விமானிகளுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஒரு விமானி, மரிஜுவானா பயன்படுத்தியது உறுதியானது.

இதன்பின்னா் ஏா் இந்தியா குழுமம் தரப்பில் தனது குழுமத்தை சோ்ந்த ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களைச் சோ்ந்த விமானிகளுக்கு கட்டாய போதை மருந்து சோதனை நடத்த கடந்த 13-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இதன்படி, சுமாா் 400 விமானிகளுக்கு முதல்கட்ட போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்போது 2 விமானிகள் போதை மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்தனா். இதனால், அவா்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அடுத்தகட்டமாக உறுதிப்படுத்துதல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இது குறித்து ஏா் இந்தியா குழும பதிலை அறிய முயன்றபோது பதிலளிக்கப்படவில்லை.

ஏா் இந்தியா குழும நிறுவனம் டாடா குழுமத்தின் ஒரு அங்கமாகும். அந்த ஏா் இந்தியா குழுமத்தில் ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 2 விமான நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சுமாா் 5 ஆயிரம் விமானிகள் பணிபுரிகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.