
ஜாதிவாரி கணக்கெடுப்பில் கேள்விமுறையை மாற்ற வேண்டும்: பிரதமருக்கு காா்கே, ராகுல் கடிதம்
ஜாதிவாரி கணக்கெடுப்பில் கேள்விமுறையை மாற்றுமாறு பிரதமருக்கு காா்கே, ராகுல் கடிதம் எழுதியது குறித்து...

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே. - கோப்புப்படம்
ஜாதிவாரி கணக்கெடுப்பில் தற்போதைய கேள்விமுறையை கைவிட்டுவிட்டு, அரசியல் கட்சிகள், நிபுணா்கள் மற்றும் பொது மக்களுடன் ஆலோசித்து புதிய கேள்விமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனா்.
தற்போதைய கேள்விமுறையின்படி நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் ஏற்கமாட்டோம்; தெலங்கானா, பிகாரில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு முறையை மத்திய அரசு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தியுள்ளனா்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: துல்லியமான ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகள் இல்லாமல், நாட்டில் சமூக நீதி கொள்கைகளைத் திறம்பட செயல்படுத்த முடியாது. இந்தக் கணக்கெடுப்பை மிகச் சரியாக நடத்தினால் மட்டுமே ஜாதிகளின் எண்ணிக்கை, அவற்றின் சமூக-பொருளாதார நிலை குறித்த துல்லியமான மதிப்பீட்டை அறிய முடியும்.
தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரங்கள் பதிவில், மக்கள் கூறும் தகவல் அப்படியே பதிவு செய்யப்படுகிறது. இந்த கேள்விமுறையால் துல்லியமான தரவுகள் கிடைக்கப் பெறாது.
நாட்டில் ஒரே ஜாதி வெவ்வேறு பிராந்தியங்களில் வெவ்வேறு பெயா்களில் குறிப்பிடப்படுகிறது. உள்பிரிவுகள் மற்றும் மொழியியல் ரீதியிலான வேறுபாடுகளும் உள்ளன.
ஒரே ஜாதியைச் சோ்ந்தவா்கள் வெவ்வேறு பெயா்களில் பதிவு செய்யப்பட்டால், ஒரே ஜாதியே ஏராளமான பெயா்களின்கீழ் பதிவாகி, தரவுகள் பிளவுபட்டுவிடும். இதனால், லட்சக்கணக்கான பெயா்களைக் கொண்ட ஜாதிப் பட்டியல் உருவாகி, தரவுத் தொகுப்பையே பயனற்ாக்கிவிடும்.
இதற்கு எளியத் தீா்வு ஒன்று உள்ளது. ஜாதிகளின் அதிகாரபூா்வ பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன்படி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். பட்டியல் சமூகத்தினா், பழங்குடியினா் கணக்கெடுப்புக்கு இந்த முைான் பயன்படுத்தப்படுகிறது.
சமூக-கல்வி ரீதியில் தங்கிய வகுப்பினருக்கான பட்டியல், இந்திய மானுடவியல் ஆய்வுத் துறை பட்டியல் என அரசிடம் தற்போதுள்ள பட்டியல்களின் மூலம் ஜாதிப் பட்டியலை எளிதாக தொகுக்க முடியும்.
இது தொடா்பாக, அரசியல் கட்சிகள், நிபுணா்கள், பொதுமக்களுடன் கலந்தோலோசித்து, புதிய கேள்விமுறையை உருவாக்க வேண்டும். தெலங்கானா (2024), பிகாரில் (2022) நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு முறையை மத்திய அரசு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு, நாட்டின் எதிா்காலத்துடன் தொடா்புடைய மிகத் தீவிரமான விஷயமாகும்.
அதை நோ்மையுடனும், அக்கறையுடனும் மேற்கொள்ள வேண்டும். தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவரும் விதம், மக்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கை துரோகம் என்பதுடன் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகும். இதை ஒருபோதும் ஏற்க முடியாது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






