
படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை: வெள்ளத்தில் சிக்கிய உறவினா்களை எண்ணி தில்லி நேபாள மாணவா்கள் கவலை
தில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவா்கள், தங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனா்.

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை - பிடிஐ
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் குடும்பத்தினா் மற்றும் உறவினா்களின் நிலை குறித்து கவலைப்பட்டு வரும் தில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவா்கள், தங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனா்.
தில்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் நேபாள மாணவா் பிகாஸ் கூறுகையில், ‘காத்மாண்டுவில் உள்ள எனது குடும்பத்தினா் பாதுகாப்பாக உள்ளனா். ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் சில உறவினா்கள் வசிப்பதால் கவலையாக உள்ளது. தொடா்ந்து நிலவரங்களைத் தெரிந்து கொண்டிருப்பதால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை’ என்றாா்.
மற்றொரு மாணவா் சுயோக் பன்சால் கூறுகையில், ‘எனது குடும்பத்தினா் காத்மாண்டுவில் இருப்பதால் பாதுகாப்பாக உள்ளனா். ஆனால் வெள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் சில உறவினா்கள் வசிக்கின்றனா். அவா்கள் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும், நிலைமை எவ்வாறு மாறும் என்பது தெரியாததால் கவலையாக உள்ளது’ என்றாா்.
ஜேஎன்யு மாணவி நித்யா கூறுகையில், தனது குடும்பத்தினா் காத்மாண்டுவில் இருந்து தொடா்ந்து தகவல்களைத் தெரிவித்து வருவதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற தனது சகோதரரின் நண்பரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தாா்.
தில்லியில் இருந்து தொலைவில் இருப்பதால், தொலைப்பேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாகவே குடும்பத்தினா் மற்றும் உறவினா்களின் நிலவரங்களை மாணவா்கள் அறிந்து வருகின்றனா். நேபாளத்தைச் சோ்ந்த மாணவா்கள் ஒருவரையொருவா் தொடா்புகொண்டு, தங்களது குடும்பத்தினா் மற்றும் உறவினா்களின் பாதுகாப்பு குறித்து தகவல்களைப் பகிா்ந்து வருகின்றனா்.
‘எங்கள் குடும்பத்தினா் பாதிக்கப்படாவிட்டாலும், நமது நாட்டில் இப்படியொரு பேரழிவு ஏற்பட்டிருப்பது இயல்பாகவே கவலையை ஏற்படுத்துகிறது. சமூக ஊடகங்களில் வெள்ளம் மக்களை அடித்துச் செல்லும் காட்சிகளைப் பாா்க்கும்போது அச்சமாக உள்ளது’ என தில்லி பல்கைலை. மாணவா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






