நேபாளத்தில் திடீர் வெள்ளம்: பலி 200 ஆக உயர்வு, 476 வெளிநாட்டினர் மாயம்; மீட்புப் பணிகள் தீவிரம்
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது குறித்து...

பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. - Nepal floods
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது, 476 வெளிநாட்டினர் மாயமாகியுள்ளனர்; மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது என நேபாளத் தூதரக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
'போடே கோஷி' ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், பெரும் உயிரிழப்புகள் மற்றும் இடப்பெயர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீடுகள், சாலைகள், பாலங்கள், நீர்மின் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்புகள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் தேடுதல், மீட்பு, வெளியேற்றம், அவசர மருத்துவ உதவி மற்றும் நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்; அதேவேளையில் அதிகாரிகள் ஆற்றுப் படுகைகள் மற்றும் வெள்ள அபாயங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
நேபாளத் தூதரக வட்டாரங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'போடே கோஷி' ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது, இதுவரை 175 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எனப் பலர் காணாமல் போயுள்ளனர்.
சமீபத்திய தகவல்களின்படி, 28 நாடுகளைச் சேர்ந்த 476 பேரைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளது.
தற்போதைய நிர்வாக முன்னுரிமைகள் குறித்து விளக்கிய தூதரக வட்டாரங்கள், "இதுபோன்ற நேரங்களில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயிர்களைக் காப்பாற்றுவதும், தேடுதல், மீட்பு, வெளியேற்றம் மற்றும் நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது எங்கள் உடனடி முன்னுரிமையாகும்.
வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தைக் கருத்தில் கொண்டு, அரசு கள நிலவரத்தையும் தேவைகளையும் தொடர்ந்து மதிப்பீடு செய்யும்; தேவைப்படும் பட்சத்தில், அதிகாரப்பூர்வ வழிமுறைகள் மூலம் குறிப்பிட்ட உதவிகள் குறித்த கோரிக்கைகளைத் தெரிவிக்கும் என்று தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாட்டுத் தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால் 'ரசுவா' மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; மேலும், உடல்களை அடையாளம் காணும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த பகுதியில் பணியில் இருந்த நேபாள ராணுவத்தைச் சேர்ந்த 44 பேர், நேபாளக் காவல்துறையைச் சேர்ந்த 28 பேர் மற்றும் ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 13 பேர் ஆகியோருடனான தொடர்பும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
நேபாள சுற்றுலா வாரியத்தின் ஆரம்பகட்டத் தரவுகளின்படி, 466 வெளிநாட்டினர் மற்றும் 113 நேபாளிகள் உள்பட மொத்தம் 579 பயணிகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை தெரியவில்லை; அதேவேளையில், ரசுவாவின் 'திமுரே' பகுதியிலிருந்து 94 நேபாளிகள் மற்றும் 29 வெளிநாட்டினர் உள்பட 123 பேர் வான்வழியாக வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாள-திபெத் எல்லையில் உள்ள மலைப் பகுதியில் நிலவிய நிலையற்ற தன்மையால் பனிப்பாறைகள் சரிந்து ரசுவாகதி எல்லை பகுதியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் வடகிழக்கில், லென்டே கோலா நதிக்குள் முதலில் விழுந்தன. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு உருவானது. அந்த வெள்ளப்பெருக்கு பிறகு போடே கோஷி ஆறு வழியே பெருக்கெடுத்து ஓடிய இந்த வெள்ளப் பெருக்கு, ரசுவா, திமுரே மற்றும் சியாப்ரு பேசி வழியாகப் பாய்ந்து திரிசூலி ஆற்றில் கலந்தது. இதனால் ரசுவா, நுவாகோட், தாடிங், கோர்க்கா மற்றும் சித்வான் மாவட்டங்கள் முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளில் பனியாறு அல்லது பனிப்பாறை சரிந்ததைத் தொடர்ந்து, பாறைச் சிதைவுகள் நிறைந்த ஒரு மாபெரும் வெள்ளம் ஏற்பட்டதால் இந்தப் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பேரழிவால் 35 வாகனங்கள் செல்லும் பாலங்கள், 45 தொங்கு பாலங்கள் மற்றும் 40 கிலோமீட்டர் நீளமுள்ள தார் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அதே நேரத்தில், விரிவான சேதத் தரவுகளைச் சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திமுரே மற்றும் சியாப்ருபேசியில் சிக்கித் தவிப்பவர்களுடன் சென்றடைவதற்காக, ராணுவம் மற்றும் தனியார் துறை ஹெலிகாப்டர்களுடன், நேபாள ராணுவம், நேபாள காவல்துறை மற்றும் நேபாள காவல் படையைச் சேர்ந்த தரைப்படையினரும் இரவு முழுவதும் பணியாற்றி, தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஈடுபட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மாவட்ட மருத்துவமனைகள் முதல் காத்மாண்டுவில் உள்ள முன்னணி மருத்துவ நிறுவனங்களின் மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், நேபாள ராணுவ முகாம்களில் தற்காலிக தங்குமிடங்கள், உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் மருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிராந்திய ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் உடனடி ஆதரவை வழங்க முன்வந்தது.
புதன்கிழமை ஆதரவை அறிவித்த தூதரக தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, கலாசாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கட்கா ராஜ் பௌடெலிடம் 10 டன் மனிதாபிமான உதவிப் பொருள்களை ஒப்படைத்ததாக கூறியுள்ளது.
உயர்மட்ட ராஜதந்திர ஒருங்கிணைப்பை முன்னிலைப்படுத்தும் வகையில், நேபாள பிரதமர் பலேந்திர ஷாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்தியா ஆழந்த அனுதாபங்களை தெரிவித்தார். மேலும், இந்தச் சவாலான நேரத்தில் நேபாளத்துக்கும் அந்நாட்டு மக்களுக்கும் சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க முழுமையாகத் தயாராக உள்ளது என்றும் மோடி கூறினார்.
நேபாள பேரழிவை அடுத்து அந்நாட்டின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில், இந்தியா அனுப்பியுள்ள 10 டன் நிவாரணப் பொருள்கள், அத்தியாவசிய மருத்துவப் பொருள்கள் காத்மாண்டுவை சென்றடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எக்ஸ் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
Summary
Nepal Embassy sources stated, "So far, 175 bodies have been recovered, while many people, both locals and tourists, are still missing
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





