

எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்து இந்தியாவிடம் இருந்து எந்தவொரு செய்தியும் வரவில்லை என ரஷிய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த திங்களன்று (பிப். 2) ஒப்புதல் வழங்கினார். இத்துடன், இந்திய பொருள்கள் மீதான 25 சதவீத வரியை 18 ஆகக் குறைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்தவும், வெனிசுவேலா மற்றும் அமெரிக்காவிடம் எண்ணெய் இறக்குமதி செய்யவதற்கும் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்த விவகாரம், சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் இந்திய அரசிடம் இருந்து எந்தவொரு செய்தியும் வரவில்லை என ரஷிய அரசின் செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில், இந்தியாவுடனான உறவுகளை அனைத்து வழிகளிலும் மேம்படுத்துவதற்கு ரஷியா விரும்புவதாகக் கூறியுள்ளார். மேலும், ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து இந்திய சுத்தகரிப்பாளர்களிடம் இருந்தும் எந்தவொரு தகவலும் வரவில்லை என ரஷிய எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 88 சதவீத எண்ணெய்யை இந்தியா வெளிநாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றது. உக்ரைன் மீதான போரால், ரஷியாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதை ஐரோப்பிய நாடுகள் ரத்து செய்துள்ளன.
ஆனால், மிகப் பெரிய எரிசக்தி தேவையுடைய இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதால், கடந்த 2025 ஆம் ஆண்டு இந்தியா மீது அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.