

அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவுடன் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிகம் மேற்கொள்வதில் எந்தவித பிரச்னையும் இல்லை என மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (பிப். 8) தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ந்துவரும் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருள்கள் இறக்குமதிக்குத் தேவையான சந்தையை உருவாக்கும் எனவும் குறிப்பிட்டார்.
தற்போது அமெரிக்காவிடமிருந்து சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருள்களை பெற முடியும் என்றும், அவை தற்போது மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வணிக ஒப்பந்தம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது:
நாம்மால் இன்று கூட 300 மில்லியன் டாலர் மதிப்புடைய பொருள்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். நாம் உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் இது 2 டிரில்லியன் டாலர் மதிப்புடையதாக அதிகரிக்கும். நாட்டின் தேவை அதிகரிக்கும் என என்னால் உறுதிப்பட கூற முடியும் எனக் குறிப்பிட்டார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வணிக ஒப்பந்தத்திற்கு பிப். 2ஆம் தேதி அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தார்.
இதன்படி, இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அதிகப்படியான 25% வரி, 18 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. இதோடு மட்டுமின்றி ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் விதிக்கப்பட்ட கூடுதலான 25% வரியும் நீக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை, நிலக்கரி, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்தவும் இந்தியா முடிவுசெய்துள்ளது.
இந்த வணிக ஒப்பந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் ஒரு நாடுகளும் இணைந்து ஒப்பந்தம் தொடர்பாக கூட்டறிக்கை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உடனான 500 பில்லியன் வணிக ஒப்பந்தத்தில், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட போயிங் விமானங்களும் அடங்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பியூஷ் கோயல்,
அமெரிக்காவில் இருந்து பெறுவதாக ஏற்கெனவே அறிவித்த இறக்குமதிகளும் 500 பில்லியன் டாலர் வணிகத்தில் அடங்கும் என்றும் அதன் தொடர்ச்சியாகவே வணிக ஒப்பந்தத்தின்படி இறக்குமதிகள் நடக்கும் எனவுக் கூறினார்.
நமக்கு விமானங்கள் தேவை. விமான என்ஜின்கள் தேவை. விமான உதிரி பாகங்களும் நாட்டின் தேவையாக உள்ளது. போயிங் விமானத் தேவைக்காக மட்டும் அமெரிக்காவுடன் ஏற்கெனவே 50 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிகம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு 80 முதல் 90 பில்லியன் டாலர் மதிப்பிலான உதிரி பாகங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது முன்பை விட தேவை அதிகரித்துள்ளது. டாடா நிறுவனம் இன்னும் பல தேவைகளை முன்வைத்துள்ளது. கச்சா எண்ணெய், எல்.பி.ஜி. தவிர விமானத் துறைக்கு மட்டும் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான வணிகம் நடைபெறவுள்ளது என்பது என்னுடைய கணிப்பு.
எஃகு துறையில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறோம். நாம் ஏற்கெனவே 17 - 18 மில்லியன் மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். ஸ்டீல் துறை வளர்ச்சியால் நிலக்கரி இறக்குமதி 300 பில்லியன் வரை அதிகரிக்கலாம் என பியூஷ் கோயல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.