

கேரளத்தில், காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியினரின் போராட்டத்தில் காயமடைந்த அம்மாநில அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்திற்கு, அம்மாநில அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் புதன்கிழமை (பிப். 25) ரயிலில் பயணம் செய்ய சென்றுள்ளார்.
அப்போது, அவருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியின் நிர்வாகிகள் அமைச்சர் விணா ஜார்ஜின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பத்தின்போது, அங்கிருந்த கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஏ.என். ஷம்சீர் கூறுகையில், இந்தத் தாகுதலில் அமைச்சர் வீணா ஜார்ஜின் கைகள் மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காயமடைந்த அமைச்சர் வீணா ஜார்ஜ் அங்குள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பி ஜெயராஜன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் வீணா ஜார்ஜின் மீதான இந்தத் தாக்குதல் ஒரு பழம்பெரும் கட்சியின் (காங்கிரஸ்) வருந்தத்தக்க அரசியல் எனவும், இது அக்கட்சியின் மாணவரணியின் போரட்டமில்லை, வன்முறையாளர்களின் வெறித்தனம் எனவும் குறிப்பிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கேரளத்தில் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற சில அசம்பாவித சம்பவங்களுக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் பொறுப்பேற்க வேண்டுமெனக் கூறி கடந்த சில வாரங்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.