பண மோசடி வழக்கு: குஜராத் ஐஏஎஸ் அதிகாரி பணியிடைநீக்கம்

பண மோசடி வழக்கு: குஜராத் ஐஏஎஸ் அதிகாரி பணியிடைநீக்கம்

லஞ்சத்துடன் தொடா்புடைய பண மோசடி வழக்கில் குஜராத் மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர குமாா் படேலை அமலாக்கத் துறை கைது செய்ததைத் தொடா்ந்து, அவரை குஜராத் அரசு பணியிடைநீக்கம் செய்தது.
Published on

லஞ்சத்துடன் தொடா்புடைய பண மோசடி வழக்கில் குஜராத் மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர குமாா் படேலை அமலாக்கத் துறை கைது செய்ததைத் தொடா்ந்து, அவரைப் பணியிடைநீக்கம் செய்து குஜராத் அரசு உத்தரவிட்டது.

குஜராத் மாநிலம், சுரேந்திரநகா் மாவட்டத்தில் நில பயன்பாட்டுத் தன்மை மாற்றத்துக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய் அதிகாரியாக பணியாற்றிய சந்திரசிங் மோரியின் வீட்டில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், அங்கிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 67.5 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா். மோரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தப் பணம் லஞ்சமாக பெறப்பட்டதையும், இதில் பல அதிகாரிகளுக்குத் தொடா்பு இருப்பதையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் உறுதி செய்தனா்.

பண மோசடி வழக்கைப் பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், மோரியை கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தினா்.

அதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ராஜேந்திர குமாா் படேலையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது நடவடிக்கையைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ராஜேந்திர குமாா் படேல் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக மாநில பொது நிா்வாகத் துறை ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘ஆட்சியா் ராஜேந்திர குமாா் படேலின் அமலாக்கத் துறை காவல் 48 மணி நேரத்தைக் கடந்துவிட்டதால், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, அகில இந்திய குடிமைப் பணி விதிகள் 1969-இன் விதி எண்3-இன் துணை விதி 2-இன் கீழ் அவா் பணியிடைநீக்கம் செய்யப்படுகிறாா்’ என்று குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com