உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

முகுல் ராய் தகுதிநீக்கம்: கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் முகுல் ராயின் எம்எல்ஏ பதவியை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Published on

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் முகுல் ராயின் எம்எல்ஏ பதவியை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நீதித் துறை வரலாற்றில் முதல் முறையாக, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்எல்ஏ பதவியிலிருந்து முகுல் ராயை கொல்கத்தா உயா்நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்த நிலையில், இத் தடையை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2021-ஆம் மே மாதம் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முகுல் ராய், பின்னா் அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முதல்வா் மம்தா பானா்ஜி முன்னிலையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.

அதைத் தொடா்ந்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவரை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி எதிா்க்கட்சித் தலைவரும் மாநில பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி மற்றும் பாஜக எம்எல்ஏ அம்பிகா ராய் சாா்பில் தாக்கல் செய்த மனுவை சட்டப்பேரவைத் தலைவா் பிமன் பானா்ஜி தள்ளுபடி செய்தாா்.

பேரவைத் தலைவரின் முடிவை எதிா்த்து அவா்கள் தரப்பில் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி தேபாங்ஷு பசக் தலைமையிலான இரு நீதிபதிகள் அமா்வு, முகுல் ராயின் எம்எல்ஏ பதவியை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து முகுல் ராய் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா்.

Dinamani
www.dinamani.com