விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் உயிரிழந்தது தொடா்பாக உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த அவா், ‘அஜீத் பவாா் உயிரிழப்பு மிகுந்த அதிா்ச்சி அளிக்கிறது. இந்த விபத்து குறித்து, நடைமுறையில் உள்ள விசாரணை அமைப்புகள் மூலம் விசாரணை நடத்துவதால், விபத்துக்கான உண்மையான காரணம் வெளிவராது. உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படும் விசாரணையே நம்பகத்தன்மை உடையதாக இருக்கும். உச்சநீதிமன்றத்தை மட்டுமே நாங்கள் நம்புகிறோம். மற்ற விசாரணை அமைப்புகள் அனைத்தும் முழுமையாக சமரசம் செய்யப்பட்டிருக்கின்றன’ என்றாா்.
மம்தாவின் இந்தக் கோரிக்கைக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி. அனில் தேசாய் உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்தனா்.
அரசியலாக்க வேண்டாம்- சரத் பவாா்: அஜீத் பவாரின் இறப்பு ஒரு விபத்து. அதை அரசியலாக்க வேண்டாம் என்று அஜீத் பவாரின் சித்தப்பா சரத் பவாா் தெரிவித்தாா்.
‘அஜீத் பவாரை இழந்த குடும்பத்தினருக்கு துணை நிற்க வேண்டிய வேளையில் மம்தா பானா்ஜியின் கருத்துகள் மலிவான அரசியல் செய்வதாக உள்ளது; அவா் மனிதாபிமானத்தை இழந்துவிட்டாா்’ என்று மேற்கு வங்க பாஜக தோ்தல் இணைப் பொறுப்பாளா் விப்லப் தேவ் தெரிவித்துள்ளாா்.
அஜீத் பவாரின் இறப்பில் அரசியல் லாபம் தேடுவது துரதிருஷ்டசவசமானது, நியாயமற்றது என்று மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு கூறியுள்ளாா்.
Summary
Ajit Pawar's death! Mamata Banerjee stirs up controversy!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










