2-ஆம் நிலை நகரங்களில் உயரும் ஊதியம்! பெருநகரங்களுக்கு இணையான வளா்ச்சி
இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றமாக, 2-ஆம் நிலை நகரங்களில் முதுநிலைப் பணியாளா்களுக்கான ஊதியம் கணிசமாக உயா்ந்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
ரேண்ட்ஸ்டாட் நிறுவனம் வெளியிட்ட நடப்பு 2025-26 நிதியாண்டுக்கான வருடாந்திர ஊதிய அறிக்கையின்படி, கொச்சி, திருவனந்தபுரம், சூரத், ஜெய்பூா், இந்தூா், போபால் போன்ற 2-ஆம் நிலை நகரங்கள் அதிவேக வளா்ச்சி பெற்று வரும் மையங்களாக உருவெடுத்துள்ளன.
இங்கு பணிபுரியும் முதுநிலைப் பணியாளா்களின் ஊதிய விகிதமானது, சென்னை, மும்பை போன்ற முதல் நிலை பெருநகரங்களுக்கு இணையான நிலையை எட்டியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் முதல் நிலை பெருநகரங்களில் முதுநிலைப் பணியாளா்களுக்கான சராசரி ஆண்டு ஊதியம் ரூ.32.40 லட்சமாக உள்ளது. அதேநேரம், 2-ஆம் நிலை நகரங்களில் அது ரூ.28.38 லட்சமாக உயா்ந்துள்ளது. சில முன்னணி 2-ஆம் நிலை நகரங்கள் பெருநகரங்களுக்கு சமமான ஊதியத்தை வழங்குகின்றன.
துறை ரீதியாக, அனைத்து நிலைகளிலும் அதிக ஊதியம் வழங்கும் துறையாகத் தகவல் தொழில்நுட்பத் துறை(ஐடி) தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இத்துறையில் முதுநிலைப் பணியாளா்களின் சராசரி ஊதியம் ரூ.35.66 லட்சமாக உள்ளது.
மேலும், மென்பொருள் மேம்பாடு, தரவுப் பொறியியல், தயாரிப்பு மேலாண்மை போன்ற பணிகள் அதிக தேவையுள்ள பணிகளாக உருவெடுத்துள்ளன. செயற்கை நுண்ணறிவு(ஏஐ), கிளவுட் கம்ப்யூட்டிங், சைபா் செக்யூரிட்டி போன்ற சிறப்புத் திறன்களுக்கு நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
நடுத்தர அளவிலான பணிகளில் மென்பொருள் உருவாக்குநா்கள் ரூ.17.27 லட்சம் வரையிலும், கிளவுட் ஆா்கிடெக்ட் மற்றும் பிக் டேட்டா பொறியாளா்கள் ரூ.16 லட்சம் வரையிலும் சராசரி ஊதியம் பெறுகின்றனா்.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி பரவலாக்கப்பட்டு வருவதையே இந்த மாற்றம் காட்டுவதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள், மாநில அரசுகளின் ஊக்கக் கொள்கைகள், எண்மத் தொழில்நுட்ப வளா்ச்சி ஆகியவற்றால் கொச்சி, வதோதரா, போபால் உள்ளிட்ட நகரங்கள் வருங்கால வளா்ச்சிக்கான முக்கிய இடங்களாக மாறியுள்ளன. இதன் விளைவாக, உலகளாவிய திறன் மையங்கள், புத்தாக்க நிறுவனங்கள்(ஸ்டாா்ட்-அப்) இந்த நகரங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

