இளைஞர்கள் பெயரில் அரசியல் கட்சிகள் தங்கள் விளையாட்டை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிரூபம் இன்று (ஜூலை 20) விமர்சித்தார்.
நீட் மோசடியைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தர் திடலில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே சோனம் வாங்சுக் திட்டமிட்டிருந்தபடி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரில் இருந்து அமைதியான முறையில் பேரணி சென்றனர்.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்ற நிலையில், பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் அரசு இவர்களைத் தடுத்து நிறுத்தியது.
பொதுப் பாதுகாப்பு கருதி தில்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால், சிஜேபி போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். பேரணியாக வருவோரைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, நாடாளுமன்றம், ஜந்தர் மந்தர் பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் குறித்து சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிரூபம் பேசியதாவது:
’’நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் இனி ஒருபோதும் நடக்கக் கூடாதது. ஆரம்பக் கட்ட போராட்டத்தின் விளைவாக இந்த விவகாரத்தை பரிசீலித்த அரசு, மறுதேர்வு நடத்தி தேர்வு முடிவுகளையும் வெளியிட்டுள்ளது. மற்றொரு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், பிரச்னைக்கான தீர்வு கிடைத்துவிட்டது. அதாவது, அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட்டுள்ளது.
ஆனால், ஜந்தர் மந்தரில் என்ன நடக்கிறது? இளைஞர்களின் பெயரில் அரசியல் கட்சிகள் தங்கள் விளையாட்டை கட்டவிழ்த்துள்ளன. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கட்சி ஒன்றையும் செய்யவில்லை; ஆனால் இளைஞர்களை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்கிறது.
2010-ல் அரவிந்த் கேஜரிவால் என்ன செய்தாரோ அதையே செய்கிறது. அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்திட்டங்களுடன் இருக்கும் இவர்களிடமிருந்து தூரம் செல்லுங்கள் என நாட்டின் ஒவ்வொரு இளைஞரையும் கேட்டுக்கொள்கிறேன். வெறும் அரசியல் விளையாட்டில் ஈடுபடும் தனிநபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
politics being played in the name of students Shiv Sena leader Sanjay Nirupam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











