தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நடத்திவரும் போராட்டத்துக்கு திரைப் பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நீட் முறைகேடுகளைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தர் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் தில்ஜித் தோஷஞ்ச்
ஜந்தர் மந்தரில் இளைஞர்களுடன் இணைந்து நடிகர் பிரகாஷ் ராஜ் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்துவரும் பாடகர் தில்ஜித் தோஷஞ்ச் இளைஞர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இவர் பாலிவுட்டில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் தாக்கியது குறித்து பதிவிட்டுள்ல இவர், நாட்டின் எதிர்காலமாக உள்ள இளைஞர்களை அரசாங்கம் இதுபோன்று நடத்தக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ''மாணவர்களின் கோரிக்கைகளை காதுகொடுத்து அரசு கேட்க வேண்டும். மக்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது கடவுளின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு சமம். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், என்னை தேசவிரோதி என்கின்றனர். இப்போது நான் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால், மீண்டும் தேச விரோதி என்று பச்சைக்குத்தப்படுவேன். ஆனால், இதுகுறித்து கவலையில்லை. கடவுள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவர் அனைவரையும் ஆசிர்வதிப்பார் ''எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகை ஜெனிலியா, கணவர் ரிதேஷ் தேஷ்முக்
நடிகை ஜெனிலியாவும் அவரின் கணவர் ரிதேஷ் தேஷ்முக்கும் சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இளைஞர்களின் குரல் சத்தமாகவும், தெளிவாகவும் அச்சமின்றியும் அனைவருக்கும் கேட்க வேண்டும் என அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
இதேபோன்று பாலிவுட் நடிகர்களான சோனு சூட், பாலிவுட் காமெடி நடிகர் வீர் தாஸ், நடிகை சோஹா அலி கான், நடிகை தியா மிர்ஸா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் மனைவியும் எழுத்தாளருமான சுபதா சிக்தார், இளைஞர்கள் சந்தித்துவரும் பொருளாதார சிக்கல் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் பலரும் பாக்கெட்டில் ரூ. 20 மட்டுமே வைத்துக்கொண்டு நம்பிக்கையுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மி, பூனம் பாண்டே, மலையாள நடிகைகள் ரஞ்சனி ஹரிதாஸ், ஷிஜா ரோஸ் ஆகியோர் போராட்டக்களத்தில் பிரகாஷ் ராஜுடன் பங்கேற்று இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Summary
CJP Protest: Actors extend support to the youth
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











