கேரளம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல் என்று அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து வி.டி. சதீசன் பேசியதாவது:
கேரளம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை போதைப்பொருள் பரவல். போதைப்பொருள் பயன்பாடு அதிகளவில் காணப்படும் மாநிலங்களில் ஒன்றாக கேரளம் மாறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
மக்கள்தொகையில் சுமார் 60 முதல் 65 சதவிகிதம் இளைஞர்கள். கேரளத்தில் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன. மாநிலத்தில் குற்றங்களின் தன்மை மாறி இருக்கிறது. கொடூரமான முறையில் குற்றங்கள் செய்யப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் போதைப்பொருள் பயன்பாடுதான்.
சிறுவர்கள் தங்கள் சொந்தப் பெற்றோரையே கொடூரமாகக் கொலை செய்கிறார்கள். கேரள மண்ணிலிருந்து போதைப்பொருள் அமைப்பை நாங்கள் முற்றிலுமாக விரட்டியடிப்போம்.
காவல் துறை போதைப்பொருள்களுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கைகளை எடுக்கும். எனவே, காவல் துறைக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்று தெரிவித்தார்.









