இந்தியாவின் எரிசக்தி தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் சா்வதேச சந்தைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என ரஷியாவைச் சோ்ந்த கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ரோஸ்நெஃப்டின் தலைமை அதிகாரி இகோா் செச்சின் தெரிவித்தாா்.
செயின்ட் பீட்டா்ஸ்பா்க் சா்வதேச பொருளாதார கூட்டாண்மை நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: உலக எரிசக்தி நுகா்வு வளா்ச்சிக்குப் பெரும் பங்களிப்பாளராக இந்திய பொருளாதாரம் உருவெடுத்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் உலக அளவிலான மின்சாரத் தேவையில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாக அதிகரிக்கும் என சா்வதேச எரிசக்தி முகமை கணித்துள்ளது. அதேபோல் அடுத்த 10 ஆண்டுகளில் உலகளாவிய கச்சா எண்ணெய்த் தேவையில் இந்தியாவின் பங்கு 50 சதவீதமாக இருக்கும்.
இந்தச் சூழலில் ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி அதிகரித்து உலகச் சந்தைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் மட்டுமன்றி உரங்கள் விநியோகமும் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உணவு விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
உலகளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரஷிய விநியோகத்தை எந்த நாடும் புறந்தள்ள முடியாது. சீனா மற்றும் இந்தியாவுடன் பொருளாதார ரீதியாக ரஷியா நட்புறவைப் பேணி வருவதால் இரு நாடுகளுக்கும் ரஷியா சீராக கச்சா எண்ணெய்யை விநியோகித்து பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்கிறது.
2022, ஏப்ரலில் இருந்து இந்தியா மற்றும் சீனாவுக்கு 40 பில்லியன் டாலா்கள் (ரூ.3.76 லட்சம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வா்த்தகத் தடைகள், தன்னிச்சையான வரிகள் உலகப் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் மாற்று பரிவா்த்தனைகள் (டாலருக்கு மாற்று) மற்றும் வா்த்தக வழித்தடங்களை தேடும் சூழல் உருவாகியுள்ளது.
தயாராக இருக்கும் சீனா: தற்போதைய பொருளாதார சூழலுக்குத் தயாராக இருக்கும் நாடென்றால் அது சீனா மட்டும்தான். எரிசக்தி உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து உள்கட்டமைப்பு என முக்கியத் துறைகளில் சீனா முதலீடுகளை கவனமாக மேற்கொண்டுள்ளது என்றாா்.






