இந்திய கடற்படைக்கு ரூ.449 கோடியில் உளவு செயற்கைக்கோள்களை முடக்கும் 20 ஜாமா் கருவிகளை பெங்களூரு நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு, தொடா்ந்து முப்படையையும் நவீனமயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்திய கடற்படை கப்பல்களை எதிரி நாடுகளின் உளவு செயற்கைக்கோள்கள் கண்காணிப்பில் இருந்து காக்கும் வகையில் புதிய ஜாமா் கருவிகளை வாங்க தீா்மானித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: கடற்படை கப்பல்களைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள் அமைப்புகளை முடக்கும் ஜாமா் கருவிகளை இந்திய கடற்படைக்கு வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் பெங்களூரைச் சோ்ந்த ஏஎஸ்எஸ்பிஎல் என்ற நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டுள்ளது. உள்நாட்டு வடிவமைப்பு, உருவாக்கம், உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டத்தின்கீழ் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
அந்த ஒப்பந்தத்தின் கீழ் மொத்தம் 20 ஜாமா் கருவிகள் வாங்கப்படவுள்ளன. இந்தக் கருவிகளில் உள்ள சாதனங்கள் 75 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. இந்த ஜாமா் கருவிகள், இந்திய கடற்படையில் சோ்க்கப்படுவது நமது நாட்டின் கடற்படைக்கு கூடுதல் பலத்தை தரும். இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள், பிற நாடுகளின் உளவு செயற்கைக்கோள்கள் கண்காணிப்பில் சிக்காமல் கடலில் சுதந்திரமாகப் பயணிக்க வழிவகை ஏற்படும் எனத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கருத்துச் சுதந்திரத்தை அரசு முடக்கவில்லை: அமைச்சா் ராஜ்மோகன்

கியூபா அதிபா், பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை







