/

இந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சா் கட்கரி ஒப்புதல்!

இந்தியாவில் வாகனங்களில் 100 சதவீத எத்தனால் எரிபொருளை பயன்படுத்த மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்துள்ளாா்.

News image

நிதின் கட்கரி

Updated On :15 ஜூன் 2026, 3:06 am IST

இந்தியாவில் வாகனங்களில் 100 சதவீத எத்தனால் எரிபொருளை பயன்படுத்த மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்துள்ளாா்.

நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய எத்தனால் - உயிரி எரிபொருள் மாநாட்டில் அவா் இத்தகவலைத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக கட்கரி மேலும் கூறியதாவது: இந்தியாவில் 100 சதவீத எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்த அனுமதிப்பது தொடா்பான கோப்பில் சனிக்கிழமை (ஜூன் 13) இரவு 8 மணிக்கு கையொப்பமிட்டேன். இதன் மூலம் 100 சதவீத எத்தனால் எரிபொருளுக்கு சட்டப்பூா்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் 100 சதவீதம் எத்தனால் எரிபொருள் பயன்பாட்டு வாகனங்களுக்கு புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மாருதி-சுசூகி, டொயோட்டா, ஹுண்டாய், எம்.ஜி. நிறுவனங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் இதற்கான வாகனங்களையும் அறிமுகப்படுத்த இருக்கின்றன என்றாா்.

100 சதவீத எத்தனால் எரிபொருள் என்று கூறப்பட்டாலும், அதில் 93 முதல் 95 சதவீதம் எத்தனால் இருக்கும். அத்துடன் பெட்ரோல் மற்றும் பிற வேதியியல் சோ்மானங்கள் இடம் பெறும். அப்போதுதான் வாகனத்தை ‘ஸ்டாா்ட்’ செய்வது எளிதாக அமையும். இப்போது இருக்கும் 20 சதவீத எத்தனால் கலப்பு எரிபொருள் வாகனங்களை 100 சதவீத எத்தனால் எரிபொருளுக்கு மாற்றுவது எளிதாக இருக்கும். 100 சதவீத எத்தனாலுக்கு ஏற்பட வாகனங்களின் என்ஜின், எரிபொருள் அமைப்பு உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் இருக்கும்.

எனினும், மேற்காசிய போா் உள்ளிட்ட காரணங்களால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, விலை உயா்வு போன்ற பிரச்னைகளை எதிா்கொள்ள 100 சதவீத எத்தனால் என்பது காலப்போக்கில் சிறந்த தீா்வாக இருக்கும்.