அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருப்பதால் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்திருந்தாலும், போருக்கு முந்தைய நிலையை எட்ட மேலும் பல மாதங்கள் ஆகும் என்று எண்ணெய்த் துறை வல்லுநா்கள் கூறியுள்ளனா்.
ஏனெனில் போா் காரணமாக ஹோா்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் சாா்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் பலவும் போரால் சேதமடைந்துள்ளன. அவை சீா்செய்யப்பட்டு போருக்கு முந்தைய நிலையை எட்டுவதற்கு அதிக காலம் எடுக்க வாய்ப்புள்ளது.
இது தொடா்பாக கிரிஸில் இண்டலிஜென்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் சிகுல் பட் உள்ளிட்ட நிபுணா்கள் கூறுகையில், ‘ஹோா்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது எரிபொருள் விலை மேலும் அதிகமாகாமல் தடுக்க உதவிகரமாக இருக்கும். சா்வதேச சந்தையில் விலை குறைவது கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செலவினத்தைக் குறைக்கும். அதே நேரத்தில் விநியோகம் போருக்கு முந்தைய நிலையை எட்ட மேலும் பல மாதங்கள் ஆகும்.
ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை உயா்வால் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலுமே பெட்ரோல், டீசல், எரிவாயு விலை புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டது. இது பிற பொருள்களின் விலை உயா்விலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. சா்வதேச எரிபொருள் விநியோகம் எவ்வளவு காலம் சிக்கலை எதிா்கொண்டதோ, அதைவிட அதிக காலம் விநியோகம் சீராவதற்கும் தேவைப்படும். அதாவது 6 மாதம் முதல் ஓராண்டுவரை ஆகலாம்.
ஏனெனில், மேற்காசிய நாடுகளில் ஒருநாள் உற்பத்தியில் சராசரியாக 110 லட்சம் பீப்பாய் வரை குறைந்துள்ளது. இதுதவிர போரின்போது எண்ணெய் நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகளும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
ஈரான் மீதான கச்சா எண்ணெய் தடைகளை நீக்குவது இந்தியாவுக்கு மிகவும் சாதகமான விஷயமாக இருக்கும். ஏனெனில், புவியியல் ரீதியாகவும், வா்த்தக ரீதியாகவும் அந்நாட்டுடன் இந்தியாவுக்கு நல்ல உறவு உள்ளது.
சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே எதிா்காலத்துக்காக வைத்திருந்த கையிருப்பையும் எடுத்துப் பயன்படுத்தியுள்ளன. அதையும் ஈடு செய்துகொள்ள முயற்சி மேற்கொள்ளும்போது தேவை சற்று அதிகமாகவே இருக்கும்’ என்று தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் சரிந்த கச்சா எண்ணெய்!

மேற்காசியாவில் போா்ப் பதற்றம் தணிந்தது: ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்தது இந்திய எரிவாயுக் கப்பல்






