சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களின் தற்போதைய தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிடத் தொடங்கியுள்ளது. மாணவர்கள் தங்களது தற்போதைய தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ டிஜிலாக்கர் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள அறிக்கையில், விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டு முடிவுகள் ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்பட்டு வருவதாகவும், பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 87 சதவீதத்திற்கு மேலான முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. விடுபட்ட மீதமுள்ள மாணவர்களின் விண்ணப்பங்களும் மிக விரைவில் பரிசீலிக்கப்பட்டு அதற்கான முடிவுகளும் அடுத்தடுத்த கட்டங்களில் வெளியிடப்படும் என்றும், ஒட்டுமொத்த செயல்முறையும் விரைவில் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது தற்போதைய தேர்வு முடிவின் நிலையை அதிகாரப்பூர்வ http://results.digilocker.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மறுமதிப்பீடு செயல்பாட்டில் நியாயத்தன்மை மற்றும் துல்லியத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மாணவரின் கோரிக்கையும் மிகவும் வெளிப்படையான மற்றும் கவனமாக கண்காணிக்கப்படும் ஒரு நடைமுறையின் மூலமே பரிசீலிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளது.
மறுமதிப்பீடு செயல்பாடு குறித்து பரவும் வதந்திகள் அல்லது சமூக வலைதளங்களில் வரும் சரிபார்க்கப்படாத பதிவுகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும், நம்பகமான தகவல்களுக்கு சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே சார்ந்திருக்குமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கூடுதல் விளக்கங்கள் தேவைப்படின், சிபிஎஸ்இ.அலுவலகங்கள் மற்றும் உதவி மையங்களைத் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் முதல் முறையாக 'திரையில் மதிப்பிடுதல்' (ஓஎஸ்எம்) முறையில் சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது. 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திரையில் மதிப்பிடும் முறையில் பெரும்பாலான குளறுபடிகள் ஏற்பட்டதாக மாணவர்கள் தரப்பில் பரவலாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைந்ததோடு, பல மாணவா்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றனா். இதன் காரணமாக, புதிய 'திரையில் மதிப்பிடுதல்'நடைமுறை மீது தொடா்ந்து பல்வேறு புகாா்கள் முன்வைக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, மாணவர்கள் தங்களின் விடைத்தாள்களின் நகல்களைப் பெற்று, மதிப்பெண்களில் ஏதேனும் விடுபட்டிருக்கிறதா, திருத்தப்படாமல் இருக்கிறதா என்பதைத் தாங்களே சரிபார்த்து, அதன் பின்னரே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் மூலம் 11.3 லட்சத்துக்கும் அதிகமான விடைத்தாள் நகல்கள் கோரி விண்ணப்பித்திருந்தனர். ஆனால் விடைத்தாள்கள் ஆய்வுக்கு பின்னர் சுமார் 1.6 லட்சம் மாணவர்கள் மட்டுமே 3.8 லட்சம் விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
Summary
CBSE has commenced the release of Class XII verification of issues observed and re-evaluation outcomes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம்: அவகாசம் நீட்டிப்பு!

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்

சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!





