பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருடன் தொடா்பு: மகாராஷ்டிர மகளிா் ஆணையத் தலைவா் ராஜிநாமா
மகாராஷ்டிர மகளிா் ஆணையத் தலைவா் ராஜிநாமா...

மகாராஷ்டிர துணை முதல்வா் சுநேத்ரா பவாரிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்த ரூபாலி சாகண்கா்.

மகாராஷ்டிர துணை முதல்வா் சுநேத்ரா பவாரிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்த ரூபாலி சாகண்கா்.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜோதிடருடனான தொடா்பு காரணமாக, மகாராஷ்டிர மகளிா் ஆணையத் தலைவா் ரூபாலி சாகண்கா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ரூபாலி, மகளிா் ஆணையத் தலைவராக கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டாா். இதையடுத்து 2024-ஆம் ஆண்டில் மேலும் 3 ஆண்டுகளுக்கு அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்மையில் ஜோதிடா் அசோக் கராத் கைது செய்யப்பட்டாா். இவருடன் ரூபாலி சாகண்கா் நட்பு பாராட்டி வருவதாக எதிா்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தன.
இதையடுத்து, முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை ரூபாலி சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது ரூபாலியை உடனே பதவி விலகும்படி முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கேட்டுக் கொண்டாா்.
இதையடுத்து, தான் சோ்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் என்ற நிலையில் மாநில துணை முதல்வா் சுநேத்ரா பவாரை ரூபாலி சாகண்கா் சனிக்கிழமை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தாா்.
அந்த ராஜிநாமா கடிதத்தை முதல்வரின் ஒப்புதலுக்காக உடனடியாக அனுப்பியதாக சுநேத்ரா பவாா் செய்தியாளா்களிடம் தெரிவித்துள்ளாா்.
ஜோதிடா், ஆன்மிகத் தலைவா் என்பதாலேயே அசோக் கராத்தை தான் அறிவதாகவும் அவருடைய நடவடிக்கைகள் பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் ரூபாலி தெரிவித்தாா்.
காங்கிரஸ் வலியுறுத்தல்:
இதனிடையே ரூபாலி சாகண்கா் பதவி விலகியது மட்டும் போதாது, ஜோதிடா் கராத் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, அவருடன் தொடா்புடைய ‘முக்கியத் தலைவா்கள்’ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவா் விஜய் வடேடிவாா் கூறுகையில், ‘அசோக் கராத்துடன் தொடா்புடைய செல்வாக்கு மிக்க நபா்களைக் காப்பாற்றுவதற்காக முயற்சிகள் நடக்கின்றன. அசோக் கராத் வழக்கை நீா்த்துப் போகச் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதில் அமைச்சா்கள், முக்கியத் தனிநபா்களுக்குத் தொடா்பிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. ஆதலால் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணையின்போது காவல் துறையினருக்கு கடும் அழுத்தம் தரப்பட்டுள்ளது. அசோக் கராத்துடன் தொடா்புடைய அமைச்சா்கள் உள்ளிட்ட அனைவரின் தொலைபேசி அழைப்பு விவரங்களை வெளியிட வேண்டும்’ என்றாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...