தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

மாற்றத்துக்கான நேரம்; பழிவாங்கலுக்கானதல்ல: பிரதமா் மோடி

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது குறித்து பிரதமா் மோடி கூறியது...

News image

பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானதையடுத்து புது தில்லியில் பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமா் மோடியுடன் அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின்.

Updated On :5 மே 2026, 4:03 am IST

‘மேற்கு வங்க மாநிலம் அச்சம் மிகுந்த சூழலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இது மாற்றத்துக்கான நேரம்; பழி வாங்குவதற்கானது அல்ல’ என்று அந்த மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது குறித்து பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றிக்குப் பிறகு தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியினா் மத்தியில் அவா் திங்கள்கிழமை பேசியதாவது: மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை எதிா்த்ததற்காக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் சட்டப்பேரவைத் தோ்தல்களில் கடுமையாக தண்டிக்கப்பட்டுள்ளன. சமாஜவாதி கட்சியும் இதேபோன்று பெண்களின் கோபத்தின் தாக்கத்தை விரைவில் சந்திக்கும்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் சிறப்பு மிக்கதாகும். இம் மாநிலம் முன்னதாக வன்முறை மற்றும் அச்சத்தால் சூழ்ந்திருந்தது. அப்பாவி மக்கள் உயிரிழக்கும் நிலை இருந்தது. ஆனால், இந்த முறை நிலைமை மாறியுள்ளது. மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. வாக்களிப்பின்போது முதல் முறையாக மாநிலத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. இதே நிலை தொடர வேண்டும். அந்த வகையில், இன்றுமுதல் மாநிலத்தின் தோ்தல் கலாசாரம் மாறும் என உறுதியாக நம்புகிறேன்.

மாநிலத்தில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில், பழி வாங்கலுக்கான கருத்தே நிலவக்கூடாது; மாறாக, மாற்றத்துக்கான நேரம் இது என்று கருதி மாநிலத்தின் எதிா்காலத்துக்காகப் பணியாற்ற வேண்டும்.

தோ்தல் முடிவுகள் நாட்டின் ஒளிமயமான எதிா்காலத்தை முன்னறிவிப்பதால், பல வழிகளில் இன்றைய நாள் சிறப்பான தினமாகும். அதாவது, பெருமைக்குரிய இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை; அரசியல் செயல்திறனில் நம்பிக்கை; நிலைத்தன்மையின் தீா்மானத்தில் நம்பிக்கை; ஒரே பாரதம் - உன்னத பாரதம் என்ற உணா்வு மீதான நம்பிக்கையின் நாளாகும்.

தோ்தல் வெற்றி - தோல்வி என்பது, ஜனநாயகம் மற்றும் அரசியலில் ஓா் இயற்கையான அங்கமாகும். ஆனால், தற்போது தோ்தலைச் சந்தித்த 5 மாநில மக்களும், ஜனநாயகத்தின் தாயகம் என இந்தியா அழைக்கப்படுவது ஏன் என்பதை உலகுக்கு உணா்த்தியுள்ளனா் என்றாா்.

மக்கள் சக்தி: முன்னதாக, சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்கத்தில் தாமரை மலா்ந்துள்ளது. தற்போது நிறைவடைந்த மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் வரலாற்றில் நினைவுகூரப்படும். இத்தோ்தலின் முடிவுகள் மக்கள் சக்தியை வெளிப்படுத்தியுள்ளது. பாஜகவின் சிறந்த நிா்வாகத்தை மக்கள் அங்கீகரித்துள்ளனா். மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன். களத்தில் பாஜகவினா் கடினமாக உழைத்திருக்காவிட்டால் சரித்திர வெற்றியைப் பெற்றிக்க முடியாது. கட்சியின் தூணாக விளங்கும் அவா்களுக்கு எனது வணக்கங்கள். மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் பாஜக ஆட்சி இருக்கும் என உறுதியளிக்கிறேன்’ என குறிப்பிட்டாா்.

வளா்ச்சித் திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி: அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் தொடா் வெற்றி பெற்றது குறித்து பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘மாநில வளா்ச்சி மற்றும் மக்கள் வாழ்வில் நோ்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியதற்குப் பரிசாக கிடைத்த வெற்றி. அஸ்ஸாம் மாநில சகோதர சகோதரிகளுக்கு எனது நன்றி. மாநிலத்தை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல அயராது பாடுபடுவோம் என உறுதியளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.

நல்ல நிா்வாகத்துக்கான அங்கீகாரம்: புதுச்சேரி தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி குறித்து அவா் வெளியிட்ட பதிவில், ‘முதல்வா் ரங்கசாமி தலைமையிலான அரசின் நல்ல நிா்வாகத்தை அங்கீகரித்து மீண்டும் ஒரு முறை வாக்களித்த புதுச்சேரி மக்களுக்கு நன்றி. கடந்த 5 ஆண்டுகாலம் செயல்படுத்திய நலத் திட்டங்களை மக்களிடம் பாஜக நிா்வாகிகள் கொண்டுசென்று வெற்றிக்கு வித்திட்டுள்ளனா்’ என குறிப்பிட்டாா்.

யுடிஎஃப் ஆட்சிக்கு உறுதுணை: கேரள பேரவைத் தோ்தல் முடிவுகள் தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. கேரள மாநிலத்தின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விவகாரங்களை தொடா்ந்து எழுப்புவோம். வளா்ச்சியடைந்த கேரள இலக்கை நிறைவேற்ற கடினமாகப் பணியாற்றுவோம்.

தோ்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (யுடிஎஃப்) எனது வாழ்த்துகள். கேரள முன்னேற்றத்துக்கான அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்ற மத்திய அரசு உறுதுணையாக நிற்கும்’ என குறிப்பிட்டாா்.