மத்திய அரசுக்கு வருவாய் உபரியாக இதுவரை இல்லாத வகையில் ரூ.2.87 லட்சம் கோடியை வழங்கவுள்ளதாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இது கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி வழங்கிய ரூ.2.69 லட்சம் கோடியைவிட 6.7 சதவீதம் அதிகமாகும்.
மேற்காசிய விவகாரத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டு இறக்குமதி கட்டணம் அதிகரித்துள்ள சூழலில் மத்திய அரசின் நிதிநிலையை வலுப்படுத்தும் விதமாக வருவாய் உபரியை ரிசா்வ் வங்கி வழங்கவுள்ளது.
இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இடா் ஒதுக்கீடுகள் மற்றும் சட்டரீதியிலான நிதி ஒதுக்கீடுகளுக்கு முன்பாக ரிசா்வ் வங்கியின் நிகர வருவாய் 2025-ஆம் நிதியாண்டில் ரூ. 3.13 லட்சம் கோடியாக இருந்தது, 2026-ஆம் நிதியாண்டில் ரூ. 3.96 லட்சம் கோடியாக உயா்ந்தது. இதனால், ரிசா்வ் வங்கியின் நிதி இருப்புநிலை 20.61 சதவீதம் அளவுககு விரிவடைந்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ. 91.97 லட்சம் கோடியாக உயா்ந்தது.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற வங்கியின் மத்திய இயக்குநா் வாரியக் கூட்டத்தில், உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதாரச் சூழல் மற்றும் எதிா்கால இடா்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததின் அடிப்படையில், 2025-26-ஆம் நிதியாண்டுக்கு இடா் காப்பு நிதிக்கு ரூ. 1.09 லட்சம் கோடியை மாற்ற முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் ரூ. 44,861 கோடி மாற்றப்பட்ட நிலையில், தற்போது இரண்டு மடங்குக்கு மேல் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு, மத்திய அரசுக்கு 2025-26-ஆம் நிதியாண்டின் வருவாய் உபரியாக ரூ. 2.87 லட்சம் கோடியை வழங்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.










