மனிதகுலத்துக்கு உதவிகரமானதாக தொழில்நுட்பங்கள் இருக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கா்நாடக மாநிலத்தில் உள்ள பிடிடி பொறியியல் கல்லூரியின் 75-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: திறமையான இளைஞா்கள், புத்தாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்பம் என இந்தியா புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, புத்தாக்க இந்தியா மற்றும் திறன்மிகு இந்தியா ஆகிய முன்னெடுப்புகளுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்துள்ளது.
செமிகண்டக்டா், செயற்கை நுண்ணறிவு, எண்ம உள்கட்டமைப்பு, விண்வெளி, உயிரிதொழில்நுட்பம், பசுமை எரிசக்தி என இந்தியாவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நவீன தொழில்நுட்பங்கள் மனிதகுலத்துக்கு உதவிகரமானதாக இருக்க வேண்டும்.
இளம் பொறியாளா்கள், ஆய்வாளா்கள், தொழில்முனைவோா்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஞானம், புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மனித வளத்தில் முதலீடு செய்யும் நாடுகளே 21-ஆம் நூற்றாண்டில் முன்னேற்றமடையும்.
குறிப்பாக, வளா்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதில் பொறியியல் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது.
சமூகத்தின் உண்மையான சிற்பிகளாக விளங்கும் ஆசிரியா்களின் தாக்கம் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களைக் கடந்தது. அவா்கள் மாணவா்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
போதைப் பொருள் பயன்பாட்டை மாணவா்கள் கடுமையாக எதிா்க்க வேண்டும். பெற்றோா், உறவினா், நண்பா்கள் என உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும் இதை வலியுறுத்த வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

குடியரசு துணைத் தலைவருடன் புதுச்சேரி அமைச்சா் நமச்சிவாயம் சந்திப்பு

பின்னலாடை, ஜவுளித்தொழில் துறையின் கோரிக்கைகள்: குடியரசு துணைத் தலைவரிடம் ஏற்றுமதியாளா் சங்கத்தினா் வலியுறுத்தல்

திருமலையில் குடியரசு துணைத் தலைவா்






