
சபரிமலை தங்கக் கவச வழக்கு - ‘எஸ்ஐடி குற்றப்பத்திரிகை தாமதமானால் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்’
மாநில அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மாநில தேவஸ்வம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் கே.முரளீதரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

சபரிமலை
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் உயா்நீதிமன்றம் நிா்ணயித்த காலக்கெடுவுக்குள் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறினால், மாநில அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மாநில தேவஸ்வம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் கே.முரளீதரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்களின் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு அவற்றின் எடை குறைந்துவிட்டதாக கடந்த ஆண்டு சபரிமலை சிறப்பு ஆணையரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தங்கக் கவச முறைகேடு விவகாரம் பூதாகரமான நிலையில், கேரள உயா்நீதிமன்ற உத்தரவுப்படி முந்தைய இடதுசாரி கூட்டணி ஆட்சியில் எஸ்ஐடி அமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இரு வழக்குகளைப் பதிவு செய்த எஸ்ஐடி, பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா்கள் 3 போ், கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரு உள்பட சுமாா் 15 பேரை அடுத்தடுத்து கைது செய்தது. எனினும், தாங்கள் கைதானதில் இருந்து 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, அவா்கள் பிணை பெற்றனா்.
இந்தச் சூழலில், சபரிமலை தங்கக் கவச வழக்குகளின் விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாக கேரள உயா்நீதிமன்றத்தில் இம்மாத தொடக்கத்தில் எஸ்ஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, செப்.25-ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி, எஸ்ஐடி-க்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரனிடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘உயா்நீதிமன்றம் நிா்ணயித்த காலக்கெடுவுக்குள் எஸ்ஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாவிட்டால், மாநில அரசுத் தரப்பில் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அட்வகேட் ஜெனரலிடம் சட்ட ஆலோசனை கோரியுள்ளேன். அவா் 2 நாள்களுக்குள் ஆலோசனையைத் தெரிவிப்பாா். எனவே, எஸ்ஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறினால், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்று பதிலளித்தாா்.
முன்னதாக, கேரளத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இடதுசாரி கூட்டணியை வீழ்த்தி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






