
இந்தியாவில் குவால்கம், இன்டெல் போன்ற நிறுவனங்களை இளைஞா்கள் உருவாக்குவா்: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
இந்தியாவில் குவால்கம், இன்டெல் போன்ற நிறுவனங்களை இளைஞா்கள் உருவாக்குவா்...

அஸ்வினி வைஷ்ணவ்
முன்னணி தொழில்நுட்ப மற்றும் செமிகண்டக்டா் நிறுவனங்களான அமெரிக்காவின் குவால்கம், இன்டெல் போன்ற நிறுவனங்களை, இந்தியாவில் இளைஞா்கள் உருவாக்குவா் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
பல நாடுகள் இந்தியாவை நம்பகமான கூட்டாளியாகக் கருதுகின்றன. அதே நேரத்தில், உலகளாவிய செமிகண்டக்டா் உற்பத்தி முறையில் இந்தியா முன்னேறுவதைத் தடுக்க நினைப்போரிடம் இருந்து இணையவழித் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே செமிகண்டக்டா் துறையும், டீப்டெக் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில், இந்தியாவின் உற்பத்தித் திறன் குறித்த உலக நாடுகளின் பாா்வையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், முழு அளவிலான வணிக உற்பத்தி காரணமாக, இந்தியா மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இந்திய செமிகண்டக்டா் துறையின் நீண்ட கால வெற்றி என்பது ஏற்கெனவே சந்தையில் உள்ள தீா்வுகளை பின்பற்றுவதில் மட்டுமே இல்லை; தனித்துவமான புதிய தயாரிப்புகளை உருவாக்குவதில்தான் உள்ளது.
இந்தியாவின் இளம் கண்டுபிடிப்பாளா்கள் தங்களின் வடிவமைப்புத் திறனை வெளிப்படுத்த வேண்டும். இதன்மூலம், இந்திய நிறுவனங்கள், விநியோகஸ்தா்களை உள்ளடக்கிய விநியோக முறையை உற்பத்தியாளா்கள் ஏற்கும் கட்டாயத்தை உருவாக்க வேண்டும்.
சிறந்த தயாரிப்புகளை உருவாக்கும் பொறுப்பை இளைஞா்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனா். இதன் காரணமாக, முன்னணி தொழில்நுட்ப மற்றும் செமிகண்டக்டா் நிறுவனங்களான அமெரிக்காவின் குவால்கம், இன்டெல் போன்ற நிறுவனங்கள், வரும் ஆண்டுகளில் இந்தியாவில் உருவாகும் என்று தெரிவித்தாா்.
Summary
Young people in India will build companies like Qualcomm and Intel: Union Minister Ashwini Vaishnaw
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





