அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

65. குட்டி குரு!

உயிர் நம் உடலோடு ஒட்டியிருக்கும் கடைசி விநாடி வரை நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

News image
Updated On :16 செப்டம்பர் 2019, 12:00 am IST

மதிய உணவுக்குப் பின்னர்.. கண்களை மூடியபடி சாய்ந்து அமர்ந்திருந்தார் குருநாதர். அது அவர் ஓய்வெடுக்கும் சில நிமிடங்கள்.

சற்று தூரத்தில் சிஷ்யன் இருந்தான். படுத்திருக்கப் பிடிப்பதில்லை அவனுக்கு. அவன் இஷ்டத்துக்கு ஏதாவது ஒரு காரியம் செய்துகொண்டிருப்பான். அன்று.. உற்சாகத்துடன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டிருந்தான்.

“அப்பாக்குட்டி.. மகன் சுப்பாகுட்டி.. அப்பாவும் பிள்ளையும் பாசத்தில் கெட்டி..”

சிஷ்யனின் பாடலில் தானாகவே ஒரு தாளமும் சேர்ந்துகொண்டதைக் கேட்டு ரசித்தார் குருநாதர். கண்களைத் திறந்துகொண்டு, எழுந்து உட்கார்ந்தார். சிஷ்யனை அருகே அழைத்தார்.

“நன்றாக இருக்கிறது நீ பாடிய பாடல்..” என்றார்.

சிஷ்யனுக்கு குஷியாகிவிட்டது. “உங்களிடம் வந்து சேருவதற்கு முன்பு பாலர் பள்ளியில் எனக்குச் சொல்லிக்கொடுத்த பாடல் அது.. எனக்கு மிகவும் பிடிக்கும்..” என்றான்.

“எங்கே.. அந்தப் பாடலை எனக்கும் கற்றுக்கொடுப்பாயா..” என்று கேட்டார் குரு.

ஆச்சரியத்துடன் குருவை நோக்கினான் சிஷ்யன்.

“எனக்குப் பாடம் கற்பிக்கும் குரு நீங்கள். எல்லாம் அறிந்தவர். என்னிடம் போய், இப்படிக் கேட்கிறீர்களே!” என்று ஆச்சரியம் விலகாமல் கூறினான்.

சத்தம்போட்டுச் சிரித்துக்கொண்டார் குரு.

“குரு என்ற நிலையை அடைந்ததனாலேயே ஒருவன் எல்லாம் அறிந்தவன் என்று ஆகிவிடாது. நீ பாடிய பாடலை நான் அறிந்திருக்கவில்லையே. பிறகெப்படி நான் எல்லாம் அறிந்தவனாக இருக்கமுடியும்?” என்றார்.

அதற்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக இருந்தான் சிஷ்யன். குருவே தொடர்ந்தார்.

“இனி கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்ற எண்ணம் ஒருவனுக்கு வரவே கூடாது. வந்துவிட்டால், அவன் சிஷ்யனாக இருக்கும் தகுதியை மட்டுமல்ல.. குருவாக இருக்கும் தகுதியையும் இழந்துவிடுவான்..” என்றார் குரு.

“உயிர் நம் உடலோடு ஒட்டியிருக்கும் கடைசி விநாடி வரை நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நல்ல விஷயங்களையும் ஆக்கப்பூர்வமான செயல்களையும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். உனக்குக் கற்றுக்கொடுப்பது மட்டும் என் கடமை அல்ல. உன்னிடம் இருந்தும் கற்றுக்கொள்வதே, என்னை நானாக இறுதிவரை இருக்கச்செய்யும். போதுமா என் விளக்கம். இப்போது அந்த அப்பாக்குட்டி பாடலை எனக்குக் கற்றுத்தருகிறீர்களா குட்டி குருவே?” என்றார் குரு. புன்னகை அவர் முகத்தில் தவழ்ந்திருந்தது.

பெருமையோடும் பெருங்குரலோடும் பாட ஆரம்பித்தான் சிஷ்யன்.. “அப்பாக்குட்டி.. மகன் சுப்பாகுட்டி..”.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.