சரோஜா தேவி: 1.யாதுமாகி நின்றார்...!

சரோஜாதேவியை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியவர் யார்... ? ’ என்று பட்டிமன்றம் நடத்தலாம்.

சரோஜாதேவியை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியவர் யார்... ? ’ என்று பட்டிமன்றம் நடத்தலாம்.

நாங்கள் தான் என்று தமிழ் சினிமாவைச் செழிப்புறச் செய்த, வணக்கத்துக்குரியவர்களின் வாரிசுகள் போட்டா போட்டி போடுவார்கள். ’

ஏவி.எம். கண்டெடுத்த நட்சத்திரங்களின் பட்டியலிலும் சரோஜாதேவிக்கு முக்கிய இடம் உண்டு! படம்- கன்னட சினிமாவின் முடிசூடா மன்னன். ’ ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமான ஏவி.எம்.மின் ‘பேடர் கண்ணப்பா’ 1954 வெளியீடு. நாயகியாக பண்டரிபாய், மற்றும் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, ராஜசுலோசனா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

மந்திரி குமாரி’ புகழ் வில்லன் நடிகர் எஸ். ஏ. நடராஜன். அவரது கன்னட தயாரிப்பு கோகிலவாணி. அதில் சரோவை முதன் முதலில் கதாநாயகியாக நடிக்க வைத்ததாக, எஸ்.ஏ. நடராஜன் (1971 பிப்ரவரி 26) திரை இதழ் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சரோஜாதேவி தமிழ்த்திரையில் அரங்கேறக் காரணமாக இருந்தவர் சின்ன அண்ணாமலை.

சென்ற நூற்றாண்டில் சின்ன அண்ணாமலை தமிழகத்தின் விஐபி. சுதந்திரப் போராட்ட வீரர், சினிமா கதாசிரியர், பட அதிபர், சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர், ஹாஸ்ய பேச்சாளர், பதிப்பகச் செம்மல் என அவரது விலாசங்களின் நீளம் அதிகம். அவரை அறியாத மேன் மக்கள், மேட்டுக்குடிகள் கிடையாது.

சாயங்காலத்தில் ஒரு நாள் சின்ன அண்ணாமலை சாகவாசமாகக் கடற்கரையை வலம் வந்தார். அங்கே அவர் பரத நாட்டியக் கலைஞர், பத்மா சுப்ரமணியத்தை’கண்டார். பத்மாவுடன் கருப்பாகவும், களையாகவும் தோன்றிய ஓர் இளம் பெண்ணும் உடன் அமர்ந்திருந்தார்.

இவள், அப்பா டைரக்ட் செய்த கன்னட சினிமாவில் நடித்திருக்கிறாள். தமிழிலும் தலை காட்ட ஆசை. உங்களோட, தங்கமலை ரகசியம்’ படத்துல ட்ரை பண்ணிப் பாருங்களேன் சார். ’

சின்ன அண்ணாமலையின் கதை படமாவதால், அவர் நிச்சயம் பத்மினி பிக்சர்ஸில் சொல்லி உதவுவார் என பத்மாவுக்கு நம்பிக்கை. சின்ன அண்ணாமலையின் சிபாரிசில் அந்தப் பெண் ரேவதி ஸ்டுடியோவில் யவ்வன ராணி’ பாடலுக்கு ஆடினார்.

யவ்வனமே என் யவ்வனமே...என் அழகினிலே என் அழகினிலே ஆடவரெல்லாம் ஆசை கொள்வார் உலகினிலே’ என்று தங்கமலை ரகசியம் படத்தில் சரோவின் ஆட்டமும், பாட்டும் சுறுசுறுப்பாகத் திரையில் ஓடும்.

தமிழ் சினிமாவில் சரோவின் முதல் காட்சி, முக்கியத் திருப்புமுனைக் கட்டமாகவும் அமைந்தது. அக்காட்சியில் நடன நங்கை சரோவின் பாதங்களில், பிரபல ஹீரோயின் ஜமுனா விழ ஒப்புக் கொண்டது விஸ்வரூப வியப்பு!

சும்மா சொல்லக் கூடாது. சிவாஜி, ப. நீலகண்டன், பந்தலு உட்பட, காமிராவில் சரோவைக் கண்டவர்கள் பிரமித்தனர்.

ஒரு புறம் பார்த்தால் பத்மினி, மறு பக்கம் வைஜெயந்தி மாலா, என ஆளாளுக்கு வர்ணித்தார்கள்.

நிச்சயம் சரோவுக்கு கிராக்கி அதிகமாகும் என்று டைரக்டர் ப. நீலகண்டனுக்குத் தோன்றியது.

அங்கிருந்த பிரமுகர்கள் அனைவரிடமும், உடனடியாக சரோவை நாயகியாக ஒப்பந்தம் செய்யச் சொல்லி, வற்புறுத்தினார்.

1957 ஜூன் 29ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது ‘தங்கமலை ரகசியம்’.

பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர். பந்தலு, இயக்கிய முதல் தமிழ் டாக்கி! ’

அதன் டைட்டிலில் மற்றும்’ என்கிறப் பட்டியலின் கீழ் தனம், பி. சரோஜாதேவி, சுசிலா என்று காட்டுவார்கள்.

சரோவின் அடுத்த சதிர்-

ஜெமினி கணேசன்-அஞ்சலிதேவி ஜோடியாக நடித்த பூலோக ரம்பை படத்தில்,

தேனைப் போலே தேடி வா... தீண்டாமலரை நாடி வா... ’ என்ற பாடலுக்கு வில்லன் பி.எஸ். வீரப்பா முன்பு நடந்தது.

டைட்டிலில் ’நடனம் பி. சரோஜாதேவி’ என்று தனி கார்டு காட்டினார்கள்.

பூலோக ரம்பை எஸ். பாலசந்தர் இயக்கத்தில் உருவாகி யோகானந்த் டைரக்ஷனில் நிறைவு பெற்றது.

யோகானந்த் மதுரை வீரன் வெற்றிச் சித்திரத்தை இயக்கியவர். அடுத்து அவர் டைரக்ட் செய்த கல்கியின் பார்த்திபன் கனவு’ படத்திலும் சரோவுக்குச் சிறு வாய்ப்பளித்தார்.

இளவரசியாக வரும் வைஜயந்தி மாலாவின் தோழி வேடம். இன்றைக்கும் சின்னத் திரைகளில் பார்க்கலாம்.

பார்த்திபன் கனவு’ வெளியான 1960 கோடையில் சரோ தன்னிகரற்ற உச்ச நட்சத்திரம்! ’

அதனால் சரோவின் பெயர் கவுரவ நடிகை’ என்று சிறப்பிடம் பெற்றது.

வாய்ப்புக்காக நெளிவு சுளுவுகளோடு பணிந்து போக வேண்டிய இடம் கோலிவுட். தொடக்கம் முதலே சரோஜாதேவியின் தாயார் ருத்ரம்மா சம்பள விஷயத்தில் கறார் கண்ணம்மா!

கேட்ட ஊதியம் கிடைக்கவில்லை என்றால், அடுத்த விநாடியே வேறு கம்பெனிக்கு டேராவைத் தூக்கி விடுவார்.

கண்டிப்பு நிறைந்த கன்னடக் குடும்பத்தில், கர்நாடகக் காவல் துறையில் பணியாற்றிய பைரப்பா’வின் மகளாகப் பிறந்தவர் சரோஜாதேவி.

தமிழ்த் திரையுலகில் ஒரு நடனப் பெண்ணாக வாழ்க்கையைத் தொடங்கியவர்... சினிமா பாஷையில் சொன்னால் குருப் டான்ஸர்...

பரதக்கலையில் மேன்மை, வாய்ப்பாட்டில் புகழ், மேடை நாடக அனுபவம் போன்றக் கூடுதல் முகவரிகள் ஏதும் சரோவுக்குக் கிடையாது.

பானுமதிக்கும், அஞ்சலிக்கும் கலையுலகில் பக்கபலமாக நின்றவர்கள் அவர்களது கணவர்கள்...

பத்மினிக்குப் பின்னால் நாட்டியமேதை உதயசங்கர் -என்.எஸ். கிருஷ்ணன்...

எடுத்த எடுப்பில் வைஜெயந்திக்கு ’வாழ்க்கை’ தந்து ஏற்றி விட்டது ஏவி.எம்...

சாவித்ரிக்கு சத்குருவாக கை கொடுத்தவர்கள் எல்.வி. பிரசாத் - ஜெமினி கணேசன்

எம்.என். ராஜத்துக்கு டி.கே. ஷண்முகம் அண்ணாச்சி - கிருஷ்ணன் – பஞ்சு மேற்சொன்னவர்கள் போல் வழி காட்ட உருப்படியான ஸ்தாபனமோ, புகழ் பெற்ற முக்கியப் பிரமுகர்களின் ஆதரவோ, போதிய பின்புலமோ இல்லாமல் மிகச் சீக்கிரத்தில் 1959 முதல் தென்னகத் திரை உலகின் துருவ நட்சத்திரமாக உயர்ந்தது சரோவுக்கு மட்டும் எப்படிச் சாத்தியம்?

தனது துரித வளர்ச்சிக்கு முழுக் காரணம் - மூன்றெழுத்து மந்திரம் எம்.ஜி.ஆர்.! ’ என்று சரோஜாதேவி நன்றிப்பெருக்குடன் ஒவ்வொரு நேர்காணலிலும் சலிக்காமல் கூறுவார். உண்மை அதுவல்ல. எம்.ஜி.ஆரையும் கடந்து அவர் கண் எதிரேயே சரோ யாதுமாகி நின்றார்!

சரோவின் கதையைச் சொல்லச் சொல்ல இனிக்கும். அத்தனையும் சுவாரஸ்யமான, வியப்பூட்டும் சம்பவங்கள்.

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் என்று மூவேந்தர்களும் கொண்டாடி மகிழ்ந்த ஒரே அபூர்வத் தாரகை!

பொற்காலத் தமிழ் சினிமாவின் வசூல் மகாத்மியம்!

மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். படங்களிலும், சரோவின் ஸ்டில் இல்லாவிடின் விநியோகஸ்தர்கள் படப்பெட்டியைத் தூக்க மறுத்துப் பின் வாங்கினார்கள்.

பொன்மனச் செம்மல் சரோவுக்குக் கொடுத்த நட்சத்திர அந்தஸ்தின் அகல நீளம், மற்ற நாயகிகளுக்கு மலைப்பை உண்டாக்கியது.

சினிமா நடிகைகளைக் ’கனவுக்கன்னி’களாகக் கொஞ்சி ரசிக்க, முதல் காரணம் கண்களைக் கவரும் அவர்களது எடுப்பான எழில் வடிவம்.

சரோ அறிமுகமான நேரம். பானுமதி - அஞ்சலி, பத்மினி- சாவித்ரி ஆகியோர் மின்னும் வைரங்கள். குணச்சித்திர நடிப்பில் ஜொலி ஜொலித்த அற்புத நட்சத்திரங்ககள்.

அழுகைக் காட்சிகளிலும் போட்டி போட்டு அவர்கள் அதிகம் வெளிப்படுத்தியது மேனி அழகை.

நால்வர் அணியை மீறி இங்கே புதிய யுவதி ஒருவர் புகழ் பெறுவார் என்று எவரும் எண்ணிப் பார்க்காதத் தருணம்.

அவர்களைக் கடந்து கதாநாயகியாக எவரையும் உருவாக்க, ஜாம்பவான்களும் தயங்கி மறுத்த காலக் கட்டம்.

சரோ உயரமும் அதிகம் இல்லை. தமிழும் அறவே தெரியாது. நிறமும் கறுப்பு. கவர்ச்சியா மூச்...!

எந்த மொழிப் படத்திலும் சரோ ஆபாசமாக நடித்ததாக ஒருவரும் விரல் நீட்டிச் சொல்ல முடியாது.

சேலை, ப்ராக், சல்வார் கமீஸ், சுடிதார் என்று எதை அணிந்தாலும், உடலைப் போர்த்தித் திரையில் பவனி வந்த ஒரே இந்திய நட்சத்திரம்!

சரோஜாதேவியை சினிமாவில் ஜீன்ஸ் போடச் சொல்லி, வற்புறுத்தாத பட முதலாளிகளே கிடையாது. ஆதவன்’ வரையில் சரோ அதை அதரிக்கவில்லை.

பின் எதனால் சிங்கிள் பீஸ் நீச்சல் உடை கூட அணியாத சரோவிடம் வீழ்ந்தார்கள் சகலரும்... ?

1961 - மே 27- பாசமலர் ரிலீஸ் அன்று குருவாயூரில் நடைபெற்றது பத்மினியின் திருமணம். ’

பத்மினியின் இடத்தைப் பிடிக்கப் போவது யார் சாவித்ரியா... சரோஜாதேவியா? ’ என்று பேசும் படம் மார்ச் 1961 இதழில், முன் கூட்டியே வாசகர்கள் வினா தொடுத்தனர்.

அம்முவின் ஆட்சி 1965ல் ஆயிரத்தில் ஒருவனில் ஆரம்பமாகியும், சரோவின் தாக்கம் தமிழர்களிடம் அன்பே வா’ எனத் தொடர்ந்தது.

‘திறமை இருந்தும் சாவித்ரி, பத்மினி இருவராலும் சரோவின் ஸ்தானத்தை அடைய முடியவில்லையே...! ’ என்று பேசும் படம் வாசகர்’ கேள்வி எழுப்பியது மார்ச் 1967 இதழில்!

மணப்பந்தலில் நின்ற சரோவுக்குக் கலை உலகம் கல்யாணப்பரிசு வழங்கிய, பராபவ ஆண்டின் மன்மத மாசி மாதம் அது!

இடையில் ஏழு ஆண்டுகளில் ஆபாசப் புத்தகம். புகையிலை. பீடி. சிகரெட். கஞ்சா. கள்ளு. கள்ளச் சாராயம் போல் தரை டிக்கெட்டுகளின் தவிர்க்க முடியாத கனவுத் துணை ஆனார் சரோ!

---------

இனி அபிநய சரஸ்வதியின் மழலை அத்தியாயத்தை சரோவே நெகிழ்ச்சியுடன் சொல்லக் கேட்போம்.

‘எங்கள் குடும்பத்தில் நான்காவது மகளாக வேண்டா வெறுப்பாக வரவேற்கப்பட்டவள் நான். முதல் மூன்று பேரும் பெண்ணாகப் பிறந்ததால், அடுத்துப் பெறுவது மகனாக இருக்க வேண்டும் என்று என் தாய் வேண்டாத தெய்வம் கிடையாது.

பாட்டனார் பேரன் பிறக்க வேண்டிப் பல கோயில்களுக்கும் யாத்திரை போய் வந்தார்.

நான் சிசுவாக பூமியில் ஜனித்ததும்,

யாருக்கு வேண்டும் இந்த சனியன்...! என்று அம்மாவிடம் முணுமுணுக்கத் தொடங்கினார். தவழும் நேரத்தில் பிஞ்சு தேகத்தில் முடக்கு வாதம். தொட்டிலே கதி என்றானது. மீண்டும் அன்னை கண்ணீருடன் மன்றாடினார்.

என் கை கால்கள் விளங்கக் கடும் விரதங்கள் அனுஷ்டித்தார்.

நீ ஏன் இப்படி ஒழுங்காகச் சாப்பிடாமல் உபவாசம் இருக்கிறாய்? இது எதற்கு நமக்கு? செத்தால் சாகட்டுமே. என்ன வேண்டுதல் கிடக்கு. இவன் பையன் ஒன்றுமில்லையே... போனால் போகட்டுமே... ’ என்றெல்லாம் என்னைத் திட்டித் தீர்த்தாராம் பாட்டனார். இப்போது என் செல்லக்கண்ணு’ என்று தட்டிக்கொடுக்கிறார்.அது மட்டுமா ? நான் ஊருக்குப் போய் பணம் தரும் போதெல்லாம்,‘நீ நூறு வயசு இருக்கணும்’ என்று வாழ்த்துவார்.

அம்மா, தனது மனத்திருப்திக்காக ஆண் குழந்தை போல் கிராப் வெட்டி விட்டு, கால்சட்டை- கோட் போட்டு என்னைச் சிங்காரித்து அழகு பார்ப்பார்.

பீனாராய் நடித்த அனார்கலி இந்தி சினிமா பெங்களூரு வந்தது. அப்போது நான் பள்ளி மாணவி. எந்நேரமும் அனார்கலி படப் பாடல்கள் என் உதடுகளில் ஒலித்தன.

அப்பாவின் அலுவலகத்தில் விழா நடக்க இருந்தது. அதில் எனது சங்கீதக் கச்சேரி நிச்சயம் உண்டு என்றார்.

‘என்னப்பா இது வேடிக்கை! ’

விளையாட்டு இல்லையம்மா. நிச்சயம் நடக்கப் போகிறது! ’தந்தை உற்சாகமாகச் சொன்னதும், பதற்றம் தொற்றிக் கொண்டது.

காவலர் விழா. மேடை ஏறியதும் நடுங்கியது.

முதலில் ஒரு பாடலைப் பாடத் தொடங்கினேன். ஆ... ஆ... என்று எங்கோ இழுத்துக் கொண்டு போய் விட்டது. எப்படியோ சமாளித்தேன். அடுத்தடுத்து நான் பாடிய பாட்டுக்கெல்லாம் ஒரே அப்ளாஸ்! ’ சரோஜாதேவி. சரோவுக்கான மற்றொரு சங்கீத சபை விரைவில் கூடியது. விளைவு கன்னடக் கலை உலகில் சரோஜா தேவியின் கால்கோள் விழா!

பெங்களூர் மேயோ ஹால். பருவத்தின் பந்தலில் இளமையின் ஜன்னல்கள் தெரிந்தன. வீதிகளில் போகிற வாலிபர்களை ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்தன.

நாற்பதுகளையும்’ சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்தி, உள்ளே எட்டிப் பார்க்கத் தூண்டியது. ஆடிட்டோரியம் முழுவதும் குமரிகளின் கூடாரமாகி மீசைகளுக்குக் குதூகலமூட்டியது.

அனைத்துப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற பாட்டுப் போட்டி. நிகழ்ச்சிக்குத் தலைமை ஹொன்னப்ப பாகவதர். பிரபல கன்னட சினிமா கதாநாயகர் - தயாரிப்பாளர்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் கொலை வழக்கில் சிக்கி சிறை சென்றார். அவர் நடித்திருக்க வேண்டிய ஜூபிடரின் வால்மீகி’ ஸ்ரீமுருகன்’, பர்மாராணி’ உள்ளிட்டத் தமிழ்ப் படங்களில் ஹொன்னப்ப பாகவதர் ஹீரோ

இரு கருநாகங்களைத் தோள்களில் இறக்கிய இரட்டை ஜடை. வட்டமிடும் கருவண்டுக் கண்கள். பார்த்த மாத்திரத்தில் மனத்தில் பசுமையூட்டிப் பற்றிக் கொள்ளும் ஆசை முகம்.

துறு துறுவென்றுத் துள்ளியவாறு அவையில் ஏறி, ஏ ஜிந்தகி கே’ என்ற பிரபல இந்தித் திரை கானத்தைப் பாடினார்.

புனித தெரசா கல்விக் கூடத்தின் மாணவி சரோஜாதேவி. பாகவதருக்கு சரோவின் சாரீரம் பிடித்து விட்டது.

‘உங்க பொண்ணு பாடினது நல்லா இருந்தது. என் படத்துல பாட வைக்கலாம்னு பார்க்குறேன். எதுக்கும் ஒரு வாய்ஸ் டெஸ்ட் எடுத்துடலாம். என்ன சொல்றீங்க? ’

சந்தோஷத்தின் சந்தன மழையில் நனைந்தது சரோவைப் பெற்ற வயிறு!

சினிமாவில் பாடக் கூப்பிடுகிறார்கள்...! உடனடியாக ரெகார்டிங் தியேட்டருக்கும் அழைக்கிறார்கள்... ’ எத்தனையோ பேர் ஸ்டுடியோ ஸ்டுடியோவாக அலைந்தும் கிடைக்காத சந்தர்ப்பம்.

ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. சரோவையே உற்று கவனித்த பாகவதர், திடீரென்று மாற்றி யோசித்தார்.

அனுமந்தப்பா... சாங் ரிகர்ஸல் முடிஞ்சதும், இந்த பொண்ணுக்கு ஒரு மேக் அப் டெஸ்டும் செஞ்சி எங்கிட்டக் கூட்டிட்டு வா. ’

ஹொன்னப்ப பாகவதரின் மகாகவி காளிதாஸ்’ கன்னடப் படத்தில் சரோவுக்குச் சின்ன வேடம் கிடைத்தது. அடுத்து அவரது பஞ்ச ரத்தினம்’ சினிமாவிலும் சரோவுக்கு சான்ஸ் வழங்கினார். ஸ்ரீராம பூஜா’ பக்திச் சித்திரமும் சரோவுக்குக் கை கொடுத்தது.

மகள் பின்னணிப் பாடகியாகப் போகிறாள்! ’ என்று எதிர்பார்த்த ருத்ரம்மாவுக்கு, சரோ முன்னணிக்கு வந்ததில் ரெட்டிப்பு மகிழ்ச்சி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com