ஒரு மனிதன் மனதின் மூலமாக இன்னொருவருக்கு செய்தியை அனுப்ப முடியுமா? தொலைவில் நடப்பதை இருந்த இடத்திலிருந்தே அறிய முடியுமா? இவையெல்லாம் பல்லாண்டுகளாக நாம் கேட்டு வரும் கேள்விகள். எதிர்காலத்தில் நடப்பதை அறிய வல்லவர்கள் ரிஷிகள்; எதிர்காலத்தில் ஊடுருவி அங்கு நடப்பதைப் பார்க்க வல்லவர்கள் என்பதை இதிகாசங்களும், புராணங்களும் எடுத்துரைக்கின்றன.
ஆனால், அறிவியல் உலகில், 'கண்ணால் காண்பதே மெய்; அறிவால் அறிவதே உண்மை' என்று கூறும்போது, இந்த தூரக் காட்சிகளும் மனதின் வழியில் செய்தி அனுப்புவதும் நம்ப முடியாத கட்டுக் கதைகள் என்கின்றனர். அமேசான் வனப் பகுதிகளில் பயணம் செய்த சில பயணிகள். அங்கு வசிக்கும் பழங்குடியினரிடம் பேசியபோது, அபூர்வ உண்மைகளைக் கண்டு பிரமித்தனர்.
மூலிகை ரகசியம்
அவற்றுள் ஒன்று அவர்கள் அறிந்திருக்கும் மூலிகை ரகசியம். எந்த வியாதி வந்தாலும் பழங்குடி இனத்திலிருக்கும் பிரத்யேகமான மருத்துவ ஆசானிடம் சென்றால், அவர் சில மூலிகைகள் மூலம் வியாதியைக் குணப்படுத்துவார்.
1920-களில் தென் அமெரிக்க மக்கள் இன அமைப்பியல் துறையில் பணியாற்றிய மருத்துவர் வில்லியம் மக்கோவர்ன், பழங்குடியினர் சிலர் ஆழ்ந்த அமைதியில் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து தூரத்தில் நடப்பதைப் பார்க்க வல்லவர்கள் என்பதை அவர் சோதிக்க விரும்பினார்.
யாருமே இதுவரை செல்லாத நூறு கி.மீ. தொலைவில் உள்ள பழங்குடியினர்களின் இருப்பிடத்தில் நடப்பதை சிலர் கூறுவதை வில்லியம் மக்கோவர்ன் கேட்டு, அவர் இதை 'காட்டு தரிசனம்' என்று குறிப்பிடுகிறார்.
நிரூபிக்கப்பட்ட உண்மைகள்
ஒருநாள் மாலை நேரத்தில் பழங்குடியினர் குடியிருப்பில் இருந்த மருத்துவ ஆசான் பல நூறு கி.மீ. தள்ளி இருக்கும் பிராபனாமா என்ற ஒரு குடியிருப்பில் அந்தக் குடியிருப்பின் ஒரு பெரும் தலைவர் திடீரென்று இறந்து விட்டதாக வில்லியத்திடம் கூறினார். இதை அவர் உடனே தனது நாள்குறிப்பில் குறித்தார்.
பல வாரங்கள் கழித்து அவர் பிராபனாமாவுக்குச் சென்றபோது, அந்தத் தலைவர் குறிப்பிட்ட நாளில் இறந்தது உண்மைதான் என்று அறிந்து பிரமித்துப் போனார். சில மூலிகைகளை உண்டால், மனதுக்கு இப்படிப்பட்ட ஓர் அபூர்வ ஆற்றல் உண்டாகி, காட்டு தரிசனங்களைக் காண முடியும் என்று அவர் கண்டறிந்தார்.
1882-ஆம் ஆண்டில் 'டெலிபதி' என்ற வார்தையை முதலில் உருவாக்கியவர் டாக்டர் எஃப். டபிள்யூ. ஹெச். மையர்ஸ்.
1848-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-இல் மூல்டான் முற்றுகையின்போது மேஜர் ஜெனரல் 'ஆர்' என்பவரும் 'சி.பி.' என்பவரும் போரில் பலத்த காயம் அடைந்தனர். 'ஆர்' இறக்கப் போவதை எண்ணி, தனது மோதிரத்தை எடுத்து தனது மனைவிக்கு அனுப்ப வேண்டும் என்று விரும்பினார்.
அதே நேரத்தில் 200 கி.மீ. தொலைவில் உள்ள பெரோஜ்பூரில் இருந்த அவரது மனைவி படுக்கையில் தூங்குவதும் விழிப்பதுமாக இருந்தார். தனது கணவன் போர்க்களத்திலிருந்து தூக்கிச் செல்லப்படுவதைக் கண்டதோடு, 'இந்த விரலிலிருந்து மோதிரத்தை எடுத்து என் மனைவிக்கு அனுப்பி விடுங்கள்' என்று கூறும் அவரது குரலையும் தெளிவாகக் கேட்டார்.
இந்தச் சம்பவம் பின்னால் சிறு விஷயம்கூட விடப்படாது சரி பார்க்கப்பட்டது. உளவியல் சங்கத்தின் தலைமையகம் ஒவ்வொரு பெயரையும் சரிபார்த்து இது உண்மைதான் என்று அறிவித்தது.
இப்படி ஏராளமான சம்பவங்கள் அறிவியல்பூர்வமாகத் தொகுக்கப்பட்டு விட்டன. மனதின் அற்புதமான ஒரு பரிமாணத்தை ஆராயும் அறிவியல் யுகத்தில் இப்போது மிகவும் முன்னேறி விட்டோம். நாளை என்னவெல்லாம் பிரமிக்க வைக்கும் தகவல்களை அறிவியல் தரப்போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







