பொன்னேரி, டிச.14: பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் நேரத்துக்கு பஸ்களை வருவதில்லை எனக்கூறி பழவேற்காட்டில் புதன்கிழமை அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி தாலுகாவில் கடலோர பகுதியாக உள்ள பழவேற்காட்டில் 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னேரியில் இருந்து 18 கி.மீ தூரமுள்ள பழவேற்காட்டுக்கு பொன்னேரியில் உள்ள விழப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதே போன்று மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் செங்குன்றம், மாதவரம், மீஞ்சூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுபகின்றன. விழுப்புரம் கோட்டம் மற்றும் மாநகர போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் இருந்து பழவேற்காடுக்கு 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்ட போதும் அவை பள்ளி, க்லலூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வேலைக்கு செல்லும் காலை நேரத்தில் சரியாக இயக்கப்படுவதில்லை எனவும், இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் பழவேற்காடு பஸ் நிலையத்துக்கு வந்த அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் சுகுமாறன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதைதொடர்ந்து 2மணி நேர தாமதத்திற்கு பிறகு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.