சென்னையில் டிச.14-ம் தேதி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது என சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு இணைப் பொதுச்செயலாளர் சி.மதியழகன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் அவர் பல்கலைக்கழக ஊழியர் சங்க அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மருத்துவப்புலம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த அனைத்து புலங்கள் அடங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரை நியமிக்க வேண்டும், பல்கலைக்கழகத்தில் இதுவரை நடைபெற்று ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகஅரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டிச.14-ல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இப்போராட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர் சங்கத்தினர் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஒட்டுமொத்த ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்கின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிச.5-ம் தேதி தமிழக முதல்வரின் செயலாளர், உயர்கல்வித்துறை அமைச்சர், சட்டத்துறை செயலர், உயர்கல்வி்த்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து மனு அளித்துள்ளோம். பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், ஊழியர்களின் சலுகைகள் ஒன்றன், பின் ஒன்றாக குறைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஓய்வுபெறும் தேதியிலேயே ஓய்வு பெற வேண்டும், பதவு உயர் கிடையாது, தேர்வு பணி சலுகைகள் நிறுத்தம், அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படாதது உள்ளிட்ட உத்தரவுகள் ஆசிரியர்கள், ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் அளித்துள்ள உறுதியை காப்பாற்றப்படாததால் அச்சம் நிலவுகிறது என சி.மதியழகன் தெரிவித்தார். பேட்டியின் போது ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரவி, துணைத்தலைவர் கற்பகம் உள்ளிட்டோர் உடனி்ருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.