மாநகராட்சி தனிக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் உத்தரவு

சேலம், ஜூலை 14: மேட்டூரில் இருந்து சேலம் மாநகருக்கு ரூ.320 கோடி செலவில் குடிநீர் கொண்டு வரும் தனிக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச
Updated on
1 min read

சேலம், ஜூலை 14: மேட்டூரில் இருந்து சேலம் மாநகருக்கு ரூ.320 கோடி செலவில் குடிநீர் கொண்டு வரும் தனிக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி உத்தரவிட்டார்.

 சேலம் மாநகர பகுதிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர், போதுமான அளவுக்கு இல்லாததால் தனிக் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கடந்த 2009 டிசம்பரில் ரூ.283.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து பணிகளை 5 சிப்பங்களாக நிறைவேற்ற தேசிய அளவிலான ஒப்பந்தப்புள்ளி மூலம் ஆணை வழங்கப்படுகிறது.

 இத் திட்டத்தின் நிலை 1-க்கான பணியை ரூ.188 கோடி செலவில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இதுவரையிலும் ரூ.125.91 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், நிலை 2-ல் 22 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் கட்டவும், இதற்கான பிரதான குழாய்கள், பழுதடைந்த குழாய்களை மாற்றிடவும் ரூ.127.12 கோடிக்கு தொழில்நுட்ப அனுமதி பெற்று, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது.

 இந்த நிலையில் தனிக் குடிநீர் திட்டத்துக்கு தற்போது கூடுதல் தொகையாக ரூ.37 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆக மொத்தம் ரூ.320 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திட்டப் பணிகளையும், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 மேட்டூர் தொட்டில்பட்டியில் நடைபெற்று வரும் நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர். அப்போது, சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் சுமார் 45 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பணிகளை விரைந்து முடிக்கும்படி அமைச்சர் கே.பி.முனுசாமி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com