பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது மதவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது மனித உரிமைகள் மீறல் என்பதால், இந்த விவகாரத்தை இந்தியா சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் நஜ்மா ஹெப்துல்லா இப்பிரச்னையை எழுப்பி பேசியதாவது: பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் உலக அமைதிக்காக அஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை நடத்தியுள்ளார்.ஆனால், அதேநேரத்தில் பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவ மைனாரிட்டி மக்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அங்கு வாழும் ஹிந்துக்களும் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தப் பிரச்னையை நாம் சர்வதேச அளவில் ஏன் கொண்டு செல்லக் கூடாது.
பிரிவினையின் போது, பாகிஸ்தான் பகுதியில் வாழ்ந்து வந்த ஹிந்துக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு, அவர்கள் மைனாரிட்டியாக ஆக்கப்பட்டனர். ஹிந்துப் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். ஷியா பிரிவு முஸ்லிம்கள் கூட தாக்கப்படுகின்றனர். அவர்களின் மசூதிகள் அழிக்கப்படுகின்றன. இந்த தாக்குதல்கள் கண்டனத்துக்குரியவை என்று அவர் குறிப்பிட்டார்.அவருடன் சேர்ந்து சக பாஜக உறுப்பினர்களும், சில காங்கிரஸ் உறுப்பினர்களும் பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








