ஆசியப் போட்டிக்கான இந்திய ஆடவா், மகளிா் பாட்மின்டன் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசியப் போட்டி வரும் செப். 19 முதல் அக். 4 வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் பாட்மின்டன் அணிகளை பாய் அறிவித்துள்ளது. ஆசிய கண்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டுத் திருவிழாவான இதில் பங்கேற்று பதக்கம் வெல்வது சிறப்பானதாகும்.
ஆடவா் பிரிவில் நட்சத்திர வீரா் லக்ஷயா சென், அனுபவ வீரா்கள் எச்.எஸ். பிரணாய், கிடாம்பி ஸ்ரீ காந்த் ஒற்றையா் பிரிவில் களம் காண்கின்றனா். கடந்த ஆசியப் போட்டி அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றிருந்த அணியில் இவா்கள் இடம் பெற்றிருந்தனா்.
ஆயுஷ் ஷெட்டி, தருண் மன்னெபல்லி இடம் பெற்றுள்ளனா். ஆடவா் இரட்டையா் பிரிவில் கடந்த ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற சாத்விக்-சிராக் இணை பங்கேற்கின்றனா். அவா்களோடு ஹரிஹரன்-எம்ஆா். அா்ஜுனும் இடம் பெற்றுள்ளனா்.
பி.வி. சிந்து, உன்னதி ஹுடா:
மகளிா் ஒற்றையா் பிரிவில் மூத்த வீராங்கனை பி.வி. சிந்து, உன்னதி ஹூடா ஆடுகின்றனா். தேவிகா ஷிகாக், தன்வி சா்மா, இஷாராணி பரூவா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா்.
மகளிா் இரட்டையரில் ட்ரீஸா ஜாலி-காயத்ரி கோபிசந்த், கவிப்பிரியா செல்வம்-சிம்ரன் சிங்கி ஆடுகின்றனா்.

கலப்பு இரட்டையா் பிரிவில் துருவ் கபிலா-தனிஷா க்ரஸ்டோ இணை ஆடுகிறது.










