உச்சநீதிமன்ற தீர்ப்புகளையோ, தீப்பாயத்தின் தீர்ப்புகளையோ செயல்படுத்தாமல் உள்ள கர்நாடகத்திற்கு மத்தியஅரசின் மறைமுக ஆதரவு உள்ளது என்ற துணிச்சலில்தான் கர்நாடக அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், புதிய அணைகள் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு நீதி வழங்க வேண்டிய பொறுப்பு மத்தியஅரசுக்கு இருக்கிறதா, இல்லையா என்பதை மத்தியஅரசு அறிவிக்க வேண்டும். இப்பொறுப்புகள் மத்தியஅரசுக்கு இருக்கிறது என்றால், பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக இதில் தலையிட்டு புதிய அணைகள் கட்டுவதற்கு அனுமதியில்லை என தெரிவித்து தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகஅரசு உடனடியாக இந்த அபாயத்தை உணர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கர்நாடகத்திற்கு எதிராகவும், மத்தியஅரசின் ஓரவஞ்சனைக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும். தமிழகத்திற்குரிய நீதியை நிலைநாட்ட வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள விவசாயிகள், தமிழின உணர்வாளர்கள் திரண்டு கர்நாடகம் அணை கட்டுவதற்கான கால்கோள் விழா நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.