இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. இதன் இரண்டாம் பாடல், நெய் உண்ணமாட்டோம், பால் அருந்த மாட்டோம் என எவ்வித உணவு வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், தீக்குறளை (தீயதான கோள் சொல்லாதிருக்கையும்) , பிச்சை முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந் நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது.