

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் கீழ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்தது. இதன்படி, இவ்வழக்கில் இன்று நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, விஜயகாந்த் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
கடந்த வருடம் ஆக.8ம் தேதி விழுப்புரத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசினார் என்று, அரசு சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன்படி, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த ஜன.8ம் தேதி முதல் கட்ட விசாரணை நடைபெற்றது. அதில் விஜயகாந்த் நேரில் ஆஜராகவில்லை. பின்னர் 12.2.2013ல் விசாரணையிலும் அவர் ஆஜராகவில்லை. இதனால் அடுத்த விசாரணையின் போது விஜயகாந்த் அவசியம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தியாகராஜ மூர்த்தி கூறியிருந்தார். அதன்படி அவர் இன்று ஆஜரானார்.
அவரைக் காண கட்சிக்காரர்கள் நீதிமன்றத்தில் அதிக அளவில் கூடினர். அவருடன் சுமார் 200 வழக்குரைஞர்கள் வந்திருந்தனர். 5 எம்.எல்.ஏ.க்களும் வந்திருந்தனர். அவர்களில் இருவர் வழக்குரைஞர்கள். இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்.25க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.