நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்கள் குறைதீர் மன்றங்களை அரசுடன் இணைந்து நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சதாசிவம் கூறினார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சட்ட உதவி மையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட 2-ம் தளம் திறப்பு விழா நடைபெற்றது. அதைத் திறந்து வைத்த நீதிபதி பி. சதாசிவம் பேசியதாவது:
சமூகத்தில் உள்ள நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவியை வழங்கி நீதியை நிலைநாட்டவும், அவர்களுக்கு அனைத்து தரப்பினருக்கும் கிடைப்பதுபோல் சமமான நீதி விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக மக்கள் குறை தீர் மன்றங்களை (லோக் அதாலத்) நடத்துவதற்காகவுமே சட்டப் பணிகள் ஆணையச் சட்டம் 1987 உருவாக்கப்பட்டது.அவ்வாறு அனைத்து தரப்பு மக்களுக்கும் விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் குறைதீர் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அண்மையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட ஒரு மிகப் பெரிய மக்கள் குறைதீர் மன்றத்தில், ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இது எப்படி சாத்தியம் என்று விசாரித்தபோது, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் அம்மாநில அரசுடன் இணைந்து இந்த குறைதீர் மன்றத்தை நடத்தியிருப்பது தெரியவந்தது.
இதுபோல் சென்னை உயர் நீதிமன்றமும் தமிழக அரசுடன் இணைந்து மிகப் பெரிய மக்கள் குறைதீர் மன்றம் நடத்தி, நீதிமன்ற வழக்குகள் மட்டுமின்றி, குடிநீர் வாரியம், மின்சாரம், சொத்து வரி, குடும்ப அட்டை என்பன உள்ளிட்ட அரசுத் துறைகளில் நிலுவையில் இருக்கும் பல லட்சம் வழக்குகளுக்கும் விரைவில் தீர்வு காண வேண்டும்.-இவ்வாறு கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.