கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் தெருவில் வசித்து வருபவர் வஞ்சிமுத்து. தபால் துறை ஊழியரான இவருக்கு அமுதா(55) என்ற மனைவியும்,பிரபாகரன்(28), மகேஷ்(25) என்ற இரு மகன்களும் உள்ளனர்.இரு தளங்கள் கொண்ட வஞ்சிமுத்துவின் வீட்டின் 2வது தளத்தில் பிரபாகரனின் குடும்பமும், முதல் தளத்தில் மகேஷின் குடும்பமும் வசித்து வந்தனர். கீழ் தளத்தில் வஞ்சிமுத்து அவரது மனைவியுடன் வசித்து வருகிறார்.நேற்று (வியாழக்கிழமை) சென்னைக்கு உறவினரின் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் சென்று இரவு வீடு திரும்பிய வஞ்சிமுத்து மற்றும் குடும்பத்தார் கீழ் தளத்திலேயே படுத்து உறங்கினர். அப்போது அவரது பக்கத்து வீட்டு மாடி வழியே வஞ்சிமுத்துவின் வீட்டின் இரண்டாவது தளத்திற்கு நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வஞ்சிமுத்துவின் மூத்த மகன் பிராபகரன் தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 30 சவரன் நகை, 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடியுள்ளனர்.