இப்பிரச்சனைக்கு தீர்வு காண கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் போக்குவரத்துக்கழக மேலாளர், காவல்துறை அதிகாரிகள் பெற்றோர்கள் கொண்டு வட்டார அளவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி பள்ளி நேரங்களில் கூடுதலான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிதம்பரம் நகரில் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி, ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பயில தினமும் பேருந்துகளில் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி தொடங்கும் நேரத்தில், முடியும் நேரத்திலும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து செல்ல முடியாமல் மாணவ, மாணவியர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே கிராமப் புறங்களிலிருந்து சிதம்பரம் நகருக்கும் தினமும் ஒவ்வொரு வழித்தடத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.