ராம்கோ சிமெண்ட் ஆலையின் பொதுமேலாளர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 20 ஆயிரம் அபராதம் விதித்தும் விருதுநகர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரன்(52). இவர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியைச் சேர்ந்தவர் கணேசன்(35). இவர் சிமெண்ட் தொழிற்சாலையின் கல்குவாரியில் பணி செய்து வருகிறார். இந்நிலையில் பணியின் போது கவனக்குறைவாக நடந்து கொண்டதாக கூறி கடந்த 10.4.2012 அன்று கணேசனுக்கு, பொதுமேலாளர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். இதையடுத்து, எந்த விளக்கமும் அளிக்காத காரணத்தால் 12.4.2012 அன்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த முன்விரோத்தின் காரணமாக கடந்த 12.4.2012 அன்றைய நாளில் பணியை முடித்துக் கொண்டு ஆர்.ஆர்.நகரில் ஆலை குடியிருப்பு பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு மனைவி ஆனந்தியுடன் உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த கணேசன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பொதுமேலாளர் ராஜராஜேஸ்வரனை வெட்டி படுகொலை செய்தார். இதை தடுக்க வந்த ஆனந்திக்கு கைககளில் அரிவாள் வெட்டு விழுந்து படுகாயம் அடைந்தார்.
இது குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதோடு, விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதி கட்ட விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ஸ்டாலின் செல்வராஜ், கணேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதில், 302 கொலை செய்தல் பிரிவில் 10 ஆயிரம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனையும், 449 கொலை செய்யும் நோக்கத்துடன் அத்துமீறி செல்லுதல் பிரிவில் 5 வருடம் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அவரது மனைவி வெட்டப்பட்ட வழக்கில் 307 கொலை முயற்சியில் ஈடுபடுதல் பிரிவில் 7 வருடம் சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ஸ்டாலின் செல்வராஜ் தீர்ப்பு கூறியதோடு, இந்த தண்டனையை கணேசன் ஏககாலத்தில் அனுப்பவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.