மருத்துவத் தொழிலை எடுத்துக்கொண்டால், அதன் கதாநாயகர்களாக மருத்துவர்களே எப்போதும் கருதப்படுகிறார்கள். அதேசமயம், ஒரு நோயாளி நலம் பெறுவதற்கான பலவித சேவைகளை செய்து, உடல் நலத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து கவனித்து, கனித்து, மருத்துவ சேவையில் ஒரு நிறைவை அளிப்பது செவிலியர்(நர்ஸ்) எனப்படும் மருத்துவ சேவையாளர்கள்தான். இந்தத் தொழிலானது ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவானது என்றாலும், இந்தியாவில், பெரும்பாலும் பெண்கள்தான் இந்தத் தொழிலுக்கு வருகிறார்கள்.பொறுமையும், அர்ப்பணிப்பும், பொறுப்பும் இப்பணிக்குத் தேவையான மிக முக்கியமான பண்புகள். எப்போதும் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம். பரிவு மற்றும் பிறர் மனம் புண்படாமல் நடந்துகொள்ளும் பாங்கு போன்றவை தேவை. இப்பணியில் பலமணி நேரங்கள் நின்றுகொண்டே இருக்க வேண்டும் என்பதால் அதற்கேற்ற உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். அனைத்து நோயாளிகளையும் பாரபட்சமின்றி கவனிக்கும் மனப்பாங்கு வேண்டும்.