வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சிதம்பரம் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சிதம்பரம் நகரில் 59 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
இதனால் நகரில் அனைத்து சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மழைநீர் குட்டை போல் தேங்கியுள்ளது. தொடர் கனமழையால் தில்லையம்மன் கோயில் குளத்தை சுற்றி இந்து அறநிலையத் துறையினரால் சமீபத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தொடர் கனமழையினால் நகரில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டதால், அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை விபரம்: சிதம்பரம்- 59 மி.மீ, புவனகிரி- 69 மி.மீ, பரங்கிப்பேட்டை- 63 மி.மீ, அண்ணாமலைநகர் 19.6 மி.மீ, சேத்தியாதோத்ப்பு- 35.3 மி.மீ.