கடல் வழியே தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிசோதிக்கும் வகையில் கடலூர் மாவட்ட கடலோர பகுதிகளில் அம்லா ஆபரேஷன் வியாழக்கிழமை தொடங்கியது.
கடல் வழியே தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் பொருட்டு கடலோர கிராம மக்களின் ஆதரவுடன் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யும் வகையில், தமிழக போலீஸார் மற்றும் கடலோர காவல் படையினர் இணைந்து, அவ்வப்போது அம்லா ஆபரேஷன் நடத்தி வருகின்றனர்.
அதில் தமிழக போலீஸ் மற்றும் கடலோர காவல் படையைச் சேர்ந்த போலீஸார் தீவிரவாதிகள் போல், கடல் வழியே சென்று பிரதான நகரங்களில் உள்ள மக்கள் கூடும் இடங்களை நோக்கி பயணிப்பர். அவர்களை போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும். இதுபோன்று கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் இந்திய கடல் எல்லையில் தூத்துக்குடி அருகே சுற்றிக் கொண்டிருந்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தனியார் கப்பல் ஒன்று ஆயுதங்களுடன் கடலோர காவல் படையால் சுற்றி வளைக்கப்பட்டது. அதில் இருந்த 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடும் பாதுகாப்பிற்கிடையே, அமெரிக்க கப்பல், ஐந்து நாட்களாக இந்திய கடல் பகுதியில் சுற்றி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனையொட்டி, கடல் வழி பாதுகாப்பை மறு ஆய்வு செய்யும் பொருட்டு அம்லா ஆபரேஷன் வியாழக்கிழமை தொடங்கியது.
வெள்ளிக்கிழமை இரவு வரை, கடலோர கிராமங்கள் மற்றும் பிரதான நகரங்களில் உள்ள வழிபாட்டு தலங்கள், சுற்றுலா மையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.