பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் மீது சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உதவித்தேர்தல் அதிகாரியும், சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்திடம் பாமக நகரச் செயலாளர் முத்து.குமார் வியாழக்கிழமை புகார் மனு அளித்துள்ளார்.
அம்மனுவில்: அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து கடந்த ஏப்.8-ம் தேதி சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரையும், அவர்களது குடும்பத்தினரையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும், அவமானப்படுத்தும் நோக்கில் அருவருப்பான வார்த்தைகளால் திட்டி உள்ளார். அவரது பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் முத்து.குமார் தெரிவித்துள்ளார்.