கரூரில் காதல் கணவரோடு வாழ சேர்த்துவைக்க கோரி இளம்பெண் தனது நான்கு மாத கைக்குழந்தையுடன் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர் தெற்கு காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மகன் தினகரன் (27). இவர் குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரம் விற்கும் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலைப்பார்த்து வருகிறார். இவரது தந்தை மோகன்தாசுக்கு கடந்த 2009-ல் உடல்நிலை சரியில்லாமல் போனபோது, அவரை கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது அவருக்கு அருகே அரவக்குறிச்சி அடுத்த பள்ளபட்டி அண்ணா நகரைச்சேர்ந்த இக்பால் மகள் யாஸ்மின்பானு(24)என்பவரின் உறவினரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார். அப்போது உறவினரை பார்க்க வரும்போது தினகரனின் நட்பு யாஸ்மின்பானுவுக்கு கிடைத்தது. இருவரும் நெருங்கிப் பழகியதால் காதலில் விழுந்து கடந்த 2009 ஆகஸ்ட் மாதம் கரூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் ஆரம்பத்தில் இருவீட்டார் தரப்பிலும் மிகுந்த எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் தினகரனின் வீட்டார் அவர்களை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். இந்நிலையில் இரண்டாவதாக கர்ப்பம் தரித்த யாஸ்மின் பானு கடந்த செப்டம்பரில் பிரசவத்துக்கு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது அவ்வப்போது மனைவியை பார்க்கச் சென்ற தினகரன், மனைவியிடம் தனது தந்தைக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, எனவே குழந்தை பிறந்தவுடன் ரூ.5 லட்சம் வாங்கி வா என கூறினாராம். இந்நிலையில் பானுவுக்கு கடந்த பிப்ரவரியில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க சென்றபோதும், 5 லட்சத்துடன் வா இல்லையென்றால் வராதே என கூறிவிட்டுச் சென்றாராம்.
இந்நிலையில் புதன்கிழமை மாலை தனது தாய் பாத்திமாவுடன் காந்திகிராமத்திற்கு கணவர் வீட்டுக்கு வந்த யாஸ்மின்பானுவை தினகரன், அவரது தந்தை மோகன்தாஸ், தாய் ஆகியோர், ரூ.5 லட்சம் இருந்தால் உள்ளே வா ,இல்லையேல் வீட்டுக்குள் வரக்கூடாது என மிரட்டினார்களாம். இதனால் தினகரன் வீட்டின் முன்பே புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை வரை அங்கேயே தனது 4 மாதக்கைக்குழந்தை தம்ரின் மற்றும் இரண்டரை வயது மகன் தம்ஜித் ஆகியோருடன் உண்ணாமல் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து வருகிறார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பசுபதிபாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரிக்கச் சென்றபோது தினகரன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனராம்.
யாஸ்மின்பானுவை சமரசம் செய்ய முயன்றபோது, கணவரோடு சேர்த்து வைத்தால் மட்டுமே இங்கிருந்து அகலுவேன், இல்லையென்றால் நகரமாட்டேன் என பிடிவாதத்துடன் அங்கே இருக்கிறார். இரு குழந்தைகளுடன் தாய் நடத்தும் போராட்டத்தை கண்டு அப்பகுதியினர் மனம் கலங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.