கடலூர் புதுச்சேரி எல்லையில் நல்லவாடு கிராமம் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில் படகு சவாரி செய்த போது படகு கவிழ்ந்து கடலூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.ஒருவர் உயிர் தப்பினார்.
கடலூர் வண்ணாராப்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன்(24), பாலாஜி(24),புதுச்சேரி கலியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த சந்திரபிரகாஷ்(26) ஆகிய 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை கடலூரை அடுத்த புதுக்குப்பம் வழியாக செல்லும் சங்கராபரணி ஆற்றில் பைபர் படகு சவாரி செய்தனர். கடலோடு இணையும் சங்கராபரணி ஆற்றில் படகு சவாரி செய்து கொண்டிருக்கையில், கடல் காற்று பலமாக வீசிய நிலையில் படகு கவிழ்ந்துள்ளது. அப்போது படகில் பயணம் செய்த மூவரும் ஆற்றில் மூழ்கியுள்ளனர்.
இதில் பிரவீன் மற்றும் பாலாஜி ஆகியோர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். புதுச்சேரியைச் சேர்ந்த சந்திரபிரகாஷ் என்பவர் மட்டும் நீந்தி கரையேறி ரெட்டிச்சாவடி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து கடலூர் தீயணைப்பு மீட்புத் துறையினரும், காவல்துறையினரும் ஆற்றில் மூழ்கியவர்களின் உடலை தேடினர். இதில் பிரவீன் என்பவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. மேலும் பாலாஜியின் உடலை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.