பாபநாசம், முண்டன்துறையில் புலிகளை கண்டறிய கூடுதலாக 100 கேமிராக்கள்
மேற்குத் தொடர்ச்சி மலையில் பாபநாசம், முண்டன்துறை வனப்பகுதியில் புலிகளை கண்டறிய கூடுதலாக 100 நவீன கேமிராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைமை வனப்பாதுகாவலரும்


மேற்குத் தொடர்ச்சி மலையில் பாபநாசம், முண்டன்துறை வனப்பகுதியில் புலிகளை கண்டறிய கூடுதலாக 100 நவீன கேமிராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைமை வனப்பாதுகாவலரும் களஇயக்குநருமான மிட்டாபேனர்ஜி திங்கள்கிழமை தெரிவித்தார்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இக்காப்பகத்தில் 2013 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புலிகள், சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
புலிகள், சிறுத்தைகள் போன்ற விலங்கினங்களை கால்தடம், எச்சம், நேரடியாக கண்டறிதல், நேர்கோட்டு பாதையில் சென்று கால்தடங்களை பதிவு செய்தல், காப்பகத்தில் ஏற்கனவே உள்ள தகவல்கள் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புலிகள் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தில்லியில் வரும் பிப். 19, 20 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள புலிகள் காப்பகம், சரணாலய வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அப்போது புதிய தொழில்நுட்ப மூலம் புலிகள் இருப்பதை உறுதி செய்வது குறித்த ஆலோசிக்கப்படுகிறது.புலிகள் காப்பக களஇயக்குநரும், தலைமை வனப்பாதுகாவலருமான மிட்டாபேனர்ஜி கூறியதாவது:
களக்காடு முண்டன்துறை புலிகள் பிற சரணாலயங்களை விட மிகச் சிறந்த அமைப்பை கொண்டது. அதே நேரத்தில் சவால் நிறைந்தது. புலிகள் காப்பகம் குறித்த கல்லூரி பொதுமக்கள், மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் மார்ச் மாதத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும். 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் களக்காடு முண்டன்துறை காப்பகத்தில் 11 புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாபநாசம், முண்டன்துறை வனப்பகுதியில் 2 ஆவது கட்டமாக 50 இடங்களில் அதாவது ஒரு இடத்தில் 2 கேமிரா வீதம் 100 கேமிராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேமிராக்களில் 45 தினங்கள் பதிவு செய்யப்படும் தகவல்களை சேகரித்து புலிகள் காப்பக ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து களக்காடு வனப்பகுதியில் கேமிரா பொருத்தி கண்காணிக்கப்படும்.
காப்பகத்தில் சமூக விரோத செயல்கள், வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள் நிகழ்கி்ன்றனவா என்பதை கண்காணிக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் திடீரென சென்று கண்காணிப்பு பணியில் மேற்கொண்டேன். காப்பகத்தில் எந்த வித தவறான செயல்களோ, வனங்களை, விலங்குகளை பாதிக்கும் செயல்கள் எதுவும் இல்லை என்பதை உணர முடிந்தது.
வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனப்பணியாளர்களுக்கு முதுமலை சரணாலயத்தில் தீ விபத்து தடுப்பது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. எனவே கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் புலிகள் காப்பகத்தில் தீ விபத்து ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...