மேட்டூர் அணையில் இருந்து 5,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் செயல்தலைவர் ஜி.கனகசபை, வி.ராஜாராம் ஆகியோர் கரூர் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது:
நிகழாண்டில் வரும் ஆக.3-ம்தேதி நடைபெற உள்ள ஆடி 18ஐ முன்னிட்டு டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் காவிரியில் நீராடி விழாவை கொண்டாட 10 நாட்களுக்கு முன்னதாகவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்ற செய்தியை கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்துள்ளோம்.தற்போது கடும் வறட்சி நிலவுவதால் மேட்டூரில் இருந்து ஜேடர்பாளையம் கதவணை 51 மைல் தொலைவிலும், கட்டளை கதவணை 85 மைல் தொலைவிலும், முக்கொம்பு 115 மைலிலும், கல்லணை 131 மைல் தொலைவிலும் உள்ளன.
ஆடி 18ஐ முன்னிட்டு திறக்கப்படும் தண்ணீர் விநாடிக்கு 2000 முதல் 3,000 கன அடிவரை நீர் விட்டால் மாயனூர் கட்டளை கதவணை, முத்தரசநல்லூர் பெட்ரகுலேட்டர், எலமனூர் மேலணை, கல்லணை அடுத்து மாயவரம் வரை தண்ணீர் ஆக.3-ம்தேதிக்குள் சென்றடைவது கஷ்டம். இதனால் 50 முதல் 160 மைல் தொலைவிற்கு வலது, இடது கரைகளில் நிலத்தடி நீரை செறிவூட்டிக் கொண்டு காவிரி நீர் செல்ல வேண்டியுள்ள நிலை தற்போதுள்ளதால், காவிரியில் தண்ணீரை 5,000 கன அடிக்கு திறக்க மாவட்ட நிர்வாகம், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.