டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசுப் பள்ளி கொடிக் கம்பத்தில் சமுதாயக் கொடி: ஒரு சமுதாய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி தேசிய கொடிக்கம்பத்தில் சமுதாயக் கொடியை சிலர் ஏற்றிச் சென்றதையடுத்து இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட ஒரு

News image
Updated On :5 நவம்பர் 2014, 10:28 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி தேசிய கொடிக்கம்பத்தில் சமுதாயக் கொடியை சிலர் ஏற்றிச் சென்றதையடுத்து இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, சுந்தரபாண்டியம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக குருவையா என்பவர் உள்ளார். தேவர் ஜயந்தி (அக்டோபர் 30) அன்று இரவு பள்ளியின் தேசியக் கொடிக்கம்பத்தில் சிலர் மஞ்சள்-பச்சை நிறமுடைய குறிப்பிட்ட ஒரு சமுதாயக் கொடியை ஏற்றிச் சென்றுள்ளார்கள். 31-ம் தேதி காலையில் பள்ளியின் அலுவலக உதவியாளர் கொடியைப் பார்த்து கழற்றி தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளார். ஆனால் தலைமை ஆசிரியர் இது குறித்து எந்த நடவடிக்கையோ, கல்வித் துறை அலுவலர்களிடமோ தெரிவிக்கவில்லையாம். இது மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெரிய வரவே அவர்கள் எதிர் தரப்பு சமுதாய மாணவர்களை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று ஞாயிற்றுக்கிழமை கூறி பிரச்னையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அந்த சமுதாயத்தின் பெரியவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்ததையடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இருந்த போதிலும் இப் பகுதியில் பதற்றம் நீடித்து வருவதால் பலத்தத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர். சமுதாயக் கொடியை ஏற்றியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தினர். இது குறித்து அறிந்ததும் மாவட்டக் கல்வி அலுவலர் விஷ்ணுதாஸ், காவல் துணைக் கண்காணிப்பாளர் முரளிதரன் ஆகியோர் மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். குறிப்பிட்ட சமுதாயக் கொடியை ஏற்றியவர்களை போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

பிற்பகலில் வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்றனர். தொடர்ந்து இப் பகுதியில் பதற்றம் நீடிப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.