சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் திங்கள்கிழமை நள்ளிரவு ஆம்னி பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 23 பயணிகள் படுகாயமடைந்தனர்.
தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு சென்ற தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் ஏ.மண்டபம் எனுமிடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்து கவிழுந்ததும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.
இவ்விபத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த விஜயகுமார் (38), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (35), இவரது மனைவி வினோதா (27), திருவிடைமருதூரைச் சேர்ந்த மாரியப்பன் (34), சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மகாதேவன் (39), தஞ்சாவூரைச் சேர்ந்த குருபிரசாத் (18), அவரது தந்தை சுப்பிராஜ் (50), தாயார் சென்பகவள்ளி (43) உள்ளிட்ட 23 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.